Wednesday, December 27, 2017

உலகசினிமா அறிமுகக் குறிப்புகள் : 3

Solino (2002)




Fatih akin திரைப்படங்களில் எனக்கு பிடித்தமான ஒன்று Solino(2002).

இத்திரைப்படம் இயக்குனர் Tornatoreவின் "Cinema paradiso" மற்றும் இயக்குனர் kieslowskiயின் "Camera buff" திரைப்படங்களை வெகுவாக நினைவூட்டிக் கொண்டிருந்தது.

வழக்கமாக தன் படங்களில் நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்து வசிக்கும் மக்களின் வாழ்வியலை காட்சிப்படுத்துவது இப்படத்திலும் தவற விடப்படவில்லை.

இரு சகோதரர்களுக்கிடையிலான அன்பு எனும் நிலையை தாண்டி  பொறாமையுணர்வெழுச்சிகளும், அந்த பொறாமையின் உந்துதலில் மேற்கொள்ளும் தவறுகளும் குற்றவுணர்வுகளை கடக்கும் மனநிலகளும் விரவிக்கிடக்கின்றது.

நீண்ட நாள் குடும்பத்திற்காக உடலுழைத்து திடீரென நிகழ்ந்த ஏமாற்றத்தை விழுங்க முடியாமல் சொந்த நாட்டிற்கு திரும்பிய தாயின் தனிமைக்கு முன்னுரிமை அளித்து தன் கனவுகளை அடக்கிக்கொள்ளும்  மகனின் அந்த மெல்லுணர்வு தான் அவன் ஒரு கலைஞன் என்பதற்கான சான்றாக தென்பட்டது.

திரைப்பட இயக்குனராக வேண்டிய வெறி வறுமையுடனும் இருந்தது.

"Fire and passion"இறுதிவரை அவனுக்குள் எரிந்து கொண்டே.

Solino (2002) 
Director Fatih Akin

Revelations - (2016) 




திருமண, மற்றும் குடும்பக்கட்டமைப்பின் மீதான பல்வேறான விமர்சனங்களை எவ்வளவுதான் விவாதித்தாலும் அது சார்ந்து தீர்க்கமான முடிவை மேற்கொள்வதில் பலரும் தோற்றே போய்விடுகின்றனர். குடும்பக்கட்டமைப்பு பலருக்கு பாரம்பரிய பாதுகாப்பான வாழ்க்கை முறையாக இருந்தாலும் அது பொருளாதார ரீதியல் பல்வேறு நெருக்கடிகளை வழங்குவதோடு தனிமனித சுதந்திரத்தை பறித்து விடுவதும் நாம் அறிந்ததே. 

உண்மையில் நாம் வாழும் சூழலில் காமத்தை அவ்வளவு எளிதில் பருகிவிட்டு கடந்து விட முடியாது.கலாச்சார மாயைகளாலும் திருமணம் என்னும் கட்டமைப்பாலும் அது இறுக்கி கட்டப்பட்டிருக்கிறது.சில பல காதல்,காமங்களை கடந்த பின் இருவர் தங்களுக்கான நீண்டகால அல்லது குறுகியகால உறவை அமைத்துக்கொள்ளவதற்கான அடுத்தகட்டத்திற்குள் நுழையலாம். ஆனால் எவ்வளவுதான் தெளிவிருந்தாலும் குடும்ப திணிப்பிற்குள் சிக்குண்டு சீரழிகிறது.இன்னும் தனிமையும் வெறுமையும் மனிதனை உணர்வுரீதியாக எங்கெங்கோ கொண்டு சென்றும் விடுகின்றது.

இந்த இறுக்கமான குடும்பக்கட்டமைப்பு மற்றும் காமத்தின்பால் செல்லும் உடல் பங்கீடு நம்மை பதைபதைப்புகளுக்குள்ளாக்குகிறது. இன்னும் இந்த உடல் பங்கீட்டின் விளைவால் வன்மங்களும் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய திருமணக்குடும்பக்கட்டமைப்பையே அப்பட்டமாக விமர்சிக்கும் வகையில் மனிதனது சிக்கலான அக உணர்வுகளையும் அதன் வெளிப்பாடுகளையும் எளிய மனிதர்களின் வாழ்வியலைக் கொண்டு நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்ட திரைப்படம் “Revelations”.

இந்த திருமண உறவு ,குடும்பக்கட்டமைப்பு விவகாரத்தை அணுகும் இயக்குனர்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு.ஏனெனில் இதனை அவ்வளவு எளிதாக போகிற போக்கில் தெரிந்த கேள்விப்பட்ட சம்பவங்களையெல்லாம் வைத்துக்கொண்டு படத்தை வடிவமைத்து விட முடியாது. இவ்வாறன உணர்வுகளை நுணுக்கமாக காட்சிப்படுத்த அவ்வளவு முதிர்ச்சி வேண்டும்.நீண்ட நாட்களின் பின் உலகத்தர தமிழ்ப்படம் ஒன்றை பார்த்து மனம் முழுவதும் நெகிழ்ந்திருக்கிறேன். 

திரைப்படத்தின் இயக்குநர் விஜய் ஜெயபால் “திரைமொழியின் தீராக்காதலன்” என்றுதான் சொல்வேன். அத்தனை பெரிய விடயங்களை நுணுக்கமான காட்சிகள் மூலம் அழகாக வெளிப்படுத்தி இருப்பார். இவர்தான் கலைஞன். ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு மொழி. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் கொண்டு தமிழ் சினிமா திரை மொழியை கற்றுக்கொள்ள முயற்சி செய்யலாம். திடீரென நிகழ்ந்துவிடும் குற்றங்களும் அக்குற்றங்களை சரி செய்ய மேற்கொள்ளும் பிரயத்தனங்களும்தான் மனித உணர்வின் அடிப்படை. அத்தகைய மனிதனித உணர்வை அவ்வளவு நுணுக்கமாக ஆய்வு செய்திருப்பார் இயக்குநர்.

மனதின் இருண்ட பக்கங்கள் அழகாக வெளிக்கொணரபட்டிருக்கும். என்னைப் பொறுத்தவரை பெண்களின் பாலியல் தேவையை ஒரு புறம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் ஆண்களின் அக உளச்சிக்கலையும் கேள்விக்குட்படுத்தியிருப்பார். கதையில் புதைந்திருக்கும் ஒவ்வொரு மர்மமும் அதன் போக்கில் இலகுவாக அவிழ்க்கப்படுவது கூடுதல் சுவாரஷ்யம். 

இன்னும் படம் பார்த்து முடியும் வரை ஒரு சிறு சோர்வோ உங்களைத்தாக்கிவிடாது. பிரதான நான்கு கதாப்பாத்திரங்களைக் கொண்டு பின்னப்பட்ட இப்படம் நடிகர் தேர்வுகளையும் சிறப்பாகவே செய்துள்ளது என்றுதான் சொல்வேன். "சேத்தன்” சின்னத்திரையில் நமக்குப்பழக்கமானவர். அந்த குற்றவுணர்வுகேற்ற எளிமையான முகம்.யதார்த்தத்தை புலப்படுத்துவதில் ஒரு சோகமான பார்வையில் நம்மை விழுங்கி விடுவார். அடுத்து “லக்ஷ்மி ப்ரியா” கண்களால் பேசும் ஒரு எளிமையான அம்சமான நடிகை. பிற பாத்திரங்கள் பெரிதாக அறிமுகமில்லாமல் இருந்தாலும் நடிப்பில் சொதப்பிவிடவில்லை. கதையை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லாததாலும் தமிழ்ப்படம் என்பதாலும் படத்தின் ஒரு காட்சியை கூட விவரிக்கவில்லை.படத்தைப் பார்த்து நெகிழ்ந்து கொள்ளுங்கள். வழக்கம் போலவே தமிழ் சினிமாவால் புறக்கணிக்கப்பட்ட கலைஞனாகவே இயக்குனரும் இருக்கிறார். Netflix இல் பார்க்கலாம்.

Revelations(2016) 
Director: Vijay Jayapal





                                                   On body and soul (2017)



மனித உறவு மற்றும் உணர்வுகளை நுணுக்கமாக கண்டு பிடிக்க முயற்சி செய்யும் காவியம் என்றே சொல்லலாம்.
புனைவுதான் என்றாலும் கதையில் தர்க்க பிழைகள் ஏதுமில்லை.

படத்தில் இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை காட்சிப்படுத்தும் அதே வேளை இரு மனிதரின் காதல் உணர்வின் வெளிப்பாட்டை காட்சிப்படுத்த இரு மான்களின் காதல் கனவில் குறியீடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

நடிகையின் இயல்பு தற்காலத்திற்கு பொருத்தமற்று விசித்திரமான ஒன்றாக நமக்கு தோன்றினும் தனிமனித உணர்வு,
அவர்களின் வாழ்வியல் பின்புலத்தையும் தனித்துவத்தையும் ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

இருவரின் ஒருமித்த கனவு மற்றும் செயற்பாடுகள் நிகழும் போது மெதுவாக ஒரு சந்தத்துடன் தனக்கான உடலும் ஆன்மாவும் கண்டுபிடிக்கப்பட்டு விடுகிறது.

'கனவு' மனித ஆன்மாக்களின் அந்தரங்கமான வெளிப்பாடு.
'தூக்கம்' ஆன்மாக்களின் தேடல்களை அரங்கேற்றம் செய்யும் இடம்.
நிஜத்தில் ஆன்மாக்கள் ஒன்றிணையும் போது கனவுகளுக்கு இடமில்லாமலே போய் விடுகிறது.

On body and soul (2017)
Director:Ildiko Enyedi









Share This:   FacebookTwitterGoogle+

Monday, October 30, 2017

உலகசினிமா அறிமுகக் குறிப்புகள் : 2

The Edge Of Heaven


மரணம் ஒருவகை பிறப்பு.

ஒருவரது மரணம் மற்றுமொருவரில் எத்தகைய தாக்கத்தத்தை ஏற்படுத்துகின்றதென்றால், அவரை தட்டி எழுப்புவது மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கான ஒரு ஆணித்தனமான நோக்கத்தை விடாப்பிடியான முனகலுடன் வழங்கிவிடுகின்றது.

எவரும் எதிர்பாரமால் செய்யும் தவறுகளும் அதனால் ஏற்படும் குற்றவுணர்வுகளும் அத்தவறை சரி செய்து குற்றவுணர்வை நீக்க மேற்கொள்ளும் பிரயத்தனங்களும்தான் மனித மனங்களுக்கே என்றும் உரித்தானவை.இந்த “குற்றவுணர்வை சரி செய்தல்”என்னும் உணர்விழை ஒவ்வொரு மனிதனுக்குப்பின்னாலும் ஓடிக்கொண்டிருக்கும்.

உடல்,நிறம்,நாடு,மொழி,இனம்,மதம் இவற்றால் வேறுபட்டவர்களாக இருந்தாலும் அனைவரையும் இணைத்துவிட ஓர் உணர்வுப்புள்ளி போதுமானது.

நன்கறிந்தவரையே சாதாரணமாக புறக்கணித்துவிடும் பிறரது உணர்வானது,முன் பின் பாரதூரமாக அறியப்படாதவரால் நுண்ணுணர்வுகளுக்கு வழங்கப்படும் முன்னுரிமை பெரும்பாலும் அசாத்தியமானதாக இருந்தாலும் சில தருணங்களில் சாத்தியமானதுதான்.அத்தகையை சில தருணங்களையும் மனிதத்தின் ஆழமான உணர்வு வெளிப்பாடுகளையும் ஒருங்கே கொண்டமைந்தது “The Edge Of Heaven”.

பன்மைத்துவ கலாச்சாரம் மற்றும் உலமயமாக்கலின் விளைவு போன்றவைகள்,அரசுசார் ஆக்கிரமிப்புகள் தனிமனித வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகையில், அவர்களுக்கே உரித்தானவைகளை இழக்க நேரிடும்போது அதை எவ்வாறு அவர்கள் எதிர்த்து சமாளித்து தன்பக்கத்தை தாங்கிக்கொள்கிறார்கள் என்பதை எளிமையான காட்சி நடைகள் மூலம் காண்பிக்கும்.

வளர்ந்து வரும் ஐரோப்பா முழுவதும் “பன்முக கலாச்சாரவாதம்” எழுச்சிக்குட்பட்டிருக்கையில் ஏற்படும் பதட்டம் மற்றும் ஒருங்கிணைந்த நாடான ஜெர்மனியில் குடியேற்றத்தின் விளைவால் அதன் மக்கள் தொகையின் அதிகரிப்பு போன்றவைகள் இடையிடையே படம் பேசிச்செல்லும்.

இக்கதையினூடே மதம் தொடர்பான சிக்கல்களும் சொல்லப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.குறிப்பாக துருக்கிய ஜெர்மானியர்கள் சிலரின் இஸ்லாமிய தீவிரப்போக்கு,தனி நபர் அடக்குமுறைகள் என்பன பாரிய வன்முறையாகவே தென்பட்டன.இவ்வாறான அடக்குமுறை பெரும்பாலும் நாம் அறிந்ததே.பிறந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு புலம்பெய்ரந்தவர்கள், குடியேறியவர்கள் பன்மைத்துவ கலாச்சார மற்றும் நாகரீகங்களினுள் உள்வாங்கப்படும் போது அதனை ஏற்றுகொள்ள மறுப்பது.இன்னும் பாரம்பரிய அடையாளங்களை பேணுவதில் அதீத கவனம் செலுத்துவது.அதிலும் பெண்கள் தான் பாரியளவில்அடக்கி ஒடுக்கப்படுவது போன்ற விடயங்கள் பேசப்பட்டிருக்கும்.

இத்திரைப்பட இயக்குநர் பதிஹ் அகின் (Fatih Akin) இன் மற்றுமொரு திரைப்படமான “Head-on”(2004) இவ்வாறன அடக்குமுறையை வேறு பாணியல் வேறு வகையான உணர்வெழுச்சிச்சிகளைக்கொண்டு ஆழமாக பேசிச்செல்லும் தவற விடக்கூடாத திரைப்படம்.

“The Edge Of Heaven” திரைப்படம் கதையை விட கதாப்பத்திரங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான காரணம் பின்னிப்பூட்டப்பட்ட கதையாடல்.இது ஒரு சிறந்த Hyperlink Movieக்கான அணுகுமுறை என்று கூட சொல்லலாம்.நிச்சயமாக இயக்குநர்”Alejandro Gonzalez Inarritu” வின் Babel,21grams,Amores perros போன்ற திரைக்கதை சொல்லும் பாணி இன்னும் இயக்குநர் Wong Kar-waiயின் Fallen Angels திரைக்கதை கூட நினைவுக்கு வரலாம்.

படத்தினுள் கதாப்பாத்திரங்கள் கதைக்கருவின் இழைகளினூடாகமட்டுமே இணைகிறார்களே தவிர நேரடியாக யாரும் யாருடனும் இணையவில்லை.
அங்கு அனைவரும் ஒரவரை ஒருவர் அறிந்து அடையாளம் காணப்பட்டிருந்தால், அனைத்தும் சமநிலைக்கு கொண்டுவரப்பட்டு சுவாரஷ்யம் நீங்கி நடிப்பு அர்த்தமற்று போயிருப்பதுடன் இயக்குநர் பார்வையாளருக்கு ஏற்படுத்த நினைக்கும் உணர்வு இல்லாமலே போய்விட்டிருக்கும்.

படத்தின் ஒவ்வொரு நிகழ்வும் முன்னரே தலைப்பிட்டு சொல்லப்பட்டிருக்கும்.உதாரணமாக Yeter’s Death என்னும் தலைப்பின் பின் படம் நகரும்.முன்னதாகவே யத்தர் இறக்கப்போகிறாள் என்பது எமக்கு தெரியும்.இருந்தாலும் அது எவ்வாறு நிகழப்போகின்றது என்பதற்கான துணுக்குகளை ஆராய்ந்தபடி சுவாரஷ்யம் குன்றாமல் பார்த்துக்கொண்டிருப்போம்.அது போலவே Lotte’s Death என்னும் தலைப்பும்.

இது தவிர இரு பெண்களுக்கிடையிலான உணர்வுப்பூர்வமான காதல் உருவாக்கம் மற்றும் அதன் ஏக்கம் என்பன பிரதான கருப்பொருளாக தூக்கிப்பேசாமல் அதன் போக்கிலேயே நிகழ விடப்பட்டிருக்கும்.

இவ்வாறாக மனித மனதின் நுண்ணுணர்வுகள்,நாட்டின் அரசியல் சிக்கல்கள்,புவியியல்காலநிலை மற்றும் தலைமுறை இடைவெளி போன்ற பல்வேறு அம்சங்களை நுணுக்கமாக ஆராய்வதற்கு இயக்குநர் தவறவில்லை.

The Edge of Heaven  (2007 Turkish-German Drama)
Director : FatihAkin


The dreamers



ரசனை மற்றும் சிந்தனைத்தளத்தில் பெரும்பாலும் ஒருமித்து இருப்பவர்களுடன் நம்மை அறியாமலே எந்த அளவு நெருக்கமும் ஈடுபாடும் கொள்கிறோம் என்பதை சிந்தித்துத்துப் பார்த்ததுண்டா?

இத்தகையவர்களுக்கு கருத்துமுரண்பாடுகள் வரவே வராது என்றல்லாம் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது.இவர்கள் கலைவிரும்பிகள்.அதே நேரம் முரண்களின் காதலர்கள்.

ஒரு திரைப்படம் எந்தளவுக்கு நம் ஆன்மாவை நெருங்குகின்றது என்பதில்தான் அந்த திரைப்படத்தின் உயிர்ப்பையும் வெற்றியையும் எம்மால் நிர்ணயிக்க முடியும். “The dreamers” என் ஆன்மாவை தொட்டது என்பதை விட என்னை பல இடங்களில் பிரதி  பலித்தது என்றே கூறலாம்.நீண்ட நாட்களின் பின் விநோதமாக ரசித்து நெகிழ்ந்து பார்த்த ஒரு திரைப்படம்.

“Film Buffs are sick people” (Francois Truffaut) என்னும் வாசகம் நான் அடிக்கடி நினைவுகூறிக் கொள்வது.இத்தகைய “திரைப்பட ஆர்வலர்கள்” (Film buffs) என்னும் அடையாளம் மட்டுமே இவர்களை ஒன்றிணைத்து விடுகிறது.திரைப்படத்தால் வெகுவாக கவரப்பட்டவர்கள் பெரும்பாலும் தங்களது வாழ்வியலை, திரைப்படத்தின் கதாப்பாத்திரத்திற்குள் நுழைந்து அதனை அனுபவிக்கும் மனோபாவம் எத்தகைய அலாதியானது? அத்தகையவர்களைத்தான் நீங்கள் திரையில் பார்ப்பீர்கள்.

இத்திரைப்பட கதாப்பாத்திரங்கள் மிகவும் ஆச்சர்யமூட்ட கூடியவர்கள். இவர்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடர்ச்சியாக தங்களுக்கு பிடித்த திரைப்படங்களுடன் இணைத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.மேலும் அந்த படங்கள் “சினிமா ஆர்வலர்களின்” வாழ்க்கையை தொடுவதில் எந்த அளவு வெற்றி அடைந்துள்ளதோ அதே அளவு “The dreamers” திரைப்படமும் வெற்றி அடைந்துள்ளது.

இந்த திரைப்படம் வெளியிடப்பட்ட காலகட்டத்தில் கடுமையாகவும், மக்களுக்கு காண்பிக்கப்பட்ட ஒரு குற்றமாகவுமே கருதப்பட்டது.இன்னும் MPAA (Motion Picture Association of America) என்னும் அமைப்பால் இத்திரைப்படம் கலைக்கப்பட்டதில் இருந்து சமூகம் எவ்வளவு குறுகிய மனப்பான்மையில் இருந்தது என்பதற்கான தெளிவான ஒரு சாட்சியை எமக்கு முன்வைத்தும் விட்டது. இது ஒரு அருவருப்பான படம் என்பதெல்லாம் மிகவும் அபத்தமான குற்றச்சாட்டு.

நாவலாசிரியரான Gilbert Adair இன் ”The holly innocents” என்னும் நாவலை தழுவிய இத்திரைப்படத்தின் Screen play யும் இந்நாவலாசிரியரால் எழுதப்பட்டது. இயக்குநர் “Bernardo Bertolucci” சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கிடையிலான பாலியலின் கடுமையான பார்வையை பார்வையாளர்களிடம் கொடுத்து தேவையற்ற மெருகூட்டல்கள் இல்லாமல் இயல்பாக இயங்க விட்டிருக்கிறார்.

மூன்று நபர்களும் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கைக்குள்ளிருந்து அதை உடைப்பதற்கும் (Free Life) கட்டுப்பாடுகளற்ற சுதந்திர வாழ்க்கையை எவ்வாறு நடை முறைப்படுத்தலாம் என்பதிலும் போராடுகிறார்கள். ஒரே எண்ணக்கருக்களைக்கொண்ட இரட்டையர்களுடன் இணையும் Matthew என்னும் கதாப்பாத்திரம் எவ்வளவுதான் அவர்களுக்குள் நுழைய முயற்சித்தாலும் அவன் வேறு ஒருவன்தான் என்னும் உணர்வு அவனை விட்டுவைக்கவில்லை. அந்த இரட்டையர்களின் உறவு நிலையை பார்த்து அதிர்ச்சியுறும் Matthew உம் சரி பார்க்கின்ற பார்வையாளர்களும் சரி அவர்களுடைய உறவை இன்ஸஸ்ட் (Incest) என்று எண்ணினால் அது அவர்களுக்கு பாரிய ஏமாற்றம் தான்.

மூன்றாவது நபரைப் பொறுத்தவரையில் Théo, Isabelle கதாப்பாத்திரங்கள் மிகவும் கொடூரமானவர்கள்,அருவருப்பானவர்கள்.பாலியல் மற்றும் உளவியல் ரீதியாக ஒருவரை ஒருவர் சவால் விட்டுக் கொள்ளக்கூடியவர்கள். இதற்குள் Matthew அவர்கள் இருவரையும் மீளாய்வு செய்கிறான். பாரம்பரியமாக நாம் பார்த்துப்பழகிய சகோதரர்களை விட போட்டியாளர்களாகவும் அன்யோன்யமாகவும் எவ்வித திரையற்றவர்களாகவும் இருக்கிறார்கள். பிறருக்கு இது கேள்விக்குட்படுத்த வேண்டிய ஒன்றுதான் என்றால் கேள்விக்குட்படுத்தி விடைதேட முயற்சிக்கலாம். என்னைப்பொறுத்தவரை இங்கே அனைத்தும் புரிதலுடன் நிகழ்ந்தேறுகிறது. ஆக கேள்விகளுக்கு அவசியமேயில்லை.

அடுத்து சகோதரர்களுக்கிடையிலான மற்றும் காதலர்களுக்கிடையிலான possessive மன நிலை பற்றிய புரிதலுக்கும் இங்கு தெளிவு கிடைக்கும்.

நடிகை Eva Green இன் அழகு மற்றும் நடிப்பு பற்றி புதிதாதக வர்ணிக்க ஒன்றுமே இல்லை.அவர் தான் இந்த படத்தை நகர்த்திச்செல்லும் விசை.இன்னும் பிரதானமாக திரைக்கதையில் எழுதப்படாமல் இருந்த ஒரு நிகழ்வு திரைப்படத்தில் காட்சியாக்கபட்டிருக்கிறது.ஒரு சமயம் Matthew இன் அருகில் பேச வரும் போது Eva Green இன் கூந்தலில் எதிர்பாராமல் தீப்பற்றும்.அதை பொருட்படுத்தாமல் அவர் அதனை தட்டி அணைத்து விட்டு கடந்து செல்வார்.முகத்தில் கூட எந்தவித கலகமும் இருக்காது.அந்த சம்பவத்தை அப்படியே காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குநர்.

வாழ்க்கை,காதல்,இருத்தலியல்கொள்கை (existentialism), அழகு, பாலியல் உறவு என்பவற்றைக்கொண்டு திரைப்படத்தை மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் உருவாக்கி உள்ளார் இயக்குநர். குறிப்பாக திரைப்பட விரும்பிகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒவ்வொருவரும் தவறவிடாமல் பார்க்க வேண்டிய ஒரு படம்.
The Dreamers (2003 Drama/Romance)
Director : BernardoBertolucci


Things to Come


தனிமை பற்றிய விவாதம் சபைக்கு வந்தால் நிற்கவே இடம் இருக்காது.ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் தனிமையின் தாக்கம், ஏக்கம் பல விடயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கும் அல்லது கொன்று புதைத்திருக்கும்.

தனிமை இயற்கைக்கு மிக நெருக்கமானது. அது நம் சுயத்தை நாமே ஆய்வு செய்ய வாய்ப்பளிக்கிறது. அதை கடக்கப்பழகிவிடுதல் என்பது, "மரணத்தின் ஒரு பகுதியை ச்சுவைத்து மீண்டெழுவது போல” எம்முள் ஞானத்தின் ஒளி சுடர் விட ஆரம்பிக்கும்.

தனிமையில் சதா உழன்று கொண்டிருப்பதும், அதிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள முயற்சி செய்வதும் உலக நியதி.அதை மிக நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் பேசும் படம் இது.

இன்னும் ஒன்று. பற்றற்று இருத்தல்தான் வாழ்க்கையில் பிரதானமானது. மனித உறவுகளில் அதீத பற்றற்று இருத்தல் பற்றி என்னை யோசிக்க வைத்தது இப்படம்.இன்னும் பல உணர்வுகளை இலக்கியப்போக்கில் பேசிச்செல்கிறது.

மோனிக்கா பெல்லூசியின் பின் என்னை கடந்த சில நாட்களாக பிரம்மிக்கவைத்த நடிகைதான் இசபெல்லா (Isabelle Huppert). The Piano Teacher திரைப்படத்தின் மூலம் மனதின் அடி ஆழத்தில் இறங்கியவர். உடல் மொழி பற்றி இவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.

கணவன் தன்னை விட்டு போகிறான் என்றதும்,அவருக்கே உரிய பாணியில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு வார்த்தை மூலம் நம் மனதை பிசைந்து விடுவார்.

“I thought you would Love me forever”


வழக்கமாக நம் சமூகத்தினருக்கான பெரிய குறைதான் பெண்கள் ஏன் எப்போதும் உடலரசியலில் சார்ந்து மட்டுமே பேசுகிறார்கள்? என்பது.அவர்களை எதன் பெயர் சொல்லி அடக்க முற்படுகின்றீர்களோ அதை பேசுவது தானே நியாயமும் கூட.இருந்தாலும் இங்கு மாற்றாக மனதின் நுண்ணுணர்வுகளை பேசும் இப்படம் இளம் பிரஞ்சுப் பெண் இயக்குனருடையது என்பது மிகச்சிறப்பு.

Things to Come (2016 Drama Film)
Director : MiaHansenLove
Share This:   FacebookTwitterGoogle+

Thursday, August 31, 2017

உலகசினிமா அறிமுகக் குறிப்புகள்

Like Someone In Love : 2012



இந்த வயதில் இவ்வாறான ஆசையெல்லாம் தேவையா ? என்று பொங்குபவர்கள் பொங்கட்டும்.நான் சொல்லவந்ததை சொல்லி விட்டு போகிறேன்என்றவாறு இலக்கிய நயத்துடன் மிகவும் எளிமையாக, இன்னும் மனித மனங்களில் ஆழமான தாக்கங்களைத் தோற்றுவிக்கும் கதையை இறுதியாக சொல்லி விட்டு மறைந்தார் இயக்குநர் (Abbas Kiarostami) அப்பாஸ் கியரோஸ்தமி.

இதில் வரும் காட்சி நுண்ணறிவு உண்மயிலேயே பிரம்மிக்க வைத்தது.திரைப்படத்தில் நாம் ப்ரேமிற்குள் (Frame) பார்க்கும் விடயங்களை விட ப்ரேமிற்கு வெளியில் நடக்கும் நம்மால் பார்க்க முடியாத விடங்கள் மிகவும் முக்கியமானதுஎன்பதை இத்திரைப்படத்தில் ஆரம்ப காட்சி உணர்த்தியது.

திடீரென ஏற்படும் பெயரற்ற உறவுகளின் அன்பு,கரிசனம்,புரிதல்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும் அந்த உறவால் வெளியில் இருந்து ஏற்படும் சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதென்பது சிரமானதுதான். வழக்கமான காதல் கதை ஒன்றுதான் வெறித்தனமாக பின் தொடர்ந்து வன்முறை நிகழ்த்துகின்றது.

மிக எளிமையான முகமூடிகளைக் கொண்டு மனதின் தீவிரமான சிக்கல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு சந்தேகமும் நியாயப்படுத்தப்படுகின்றது. இதயத்தின் இருண்டபக்கத்தின் அழகு எந்தவித மாயத்தோற்றத்தையும் தராமல், இருந்தாலும் ஒரு சிறு மயக்கத்தையும் இலக்கியத்திற்கான அழகையும் கொண்டு பேசுகிறது.

Like Someone In Love (2012 Drama film)


Enter the Void : 2009 



மரணத்திற்கு பின்னரான வாழ்வு பற்றிய புரிதல் மதங்களின் நம்பிக்கையற்ற புராண கதைகளை விட போதை தலைக்கேறிய தத்துவவாதிகள் சொல்வது அதீதமான சிலிர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.நிச்சயமாக தத்துவங்களைப் புறக்கணிக்கும் மனப்பான்மை மிகவும் அரிது.மரணித்த பின் எம் ஆன்மா உடலை விட்டு எங்கு போகும்? என்ன செய்யும்? இதை ஒரு பரிசோதனையாகவே,போதை தலைக்கேறிய ஒருவனின் மரணத்தின் பின்னரான அவனது ஆன்மாவின் பார்வையில் இருந்து அவனது உலகை நமக்கு காண்பிக்கிறது.

உலக வாழ்வு பற்றிய முழுமையான புரிதலும் அனுபவமும் கிடைக்கின்ற போது இவ்வுலகிலி்ருந்து சற்று ஆன்மாவை அப்புறப்படுத்திப்பார்க்க ஆசை வரலாம்.சில சமயம் "என்னடா வாழ்க்கை இது?" என்று புரியாமல் புலம்புபவர்களுக்கும் தோன்றலாம்.அந்தவகையில் ஆன்மாவின் ஒரு விடுதலைதான் போதைப்பாவனையாக எனக்குத்தோன்றியது.பெரும்பாலான தத்துவதாதிகளின் இத்தகைய நிலையில் புதுமை ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.

ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஆழமாக பதிந்துள்ள ஒரு சிக்கலுக்கு தீர்வு காண முயற்சிக்கும் செயற்பாடுதான் இயக்குனர் மேற்கொண்டது.ஆரம்பத்தில் "The Book of the Dead" என்னும் புத்தகத்தை வாசிக்குமாறு தூண்டபடுவதும்,அதன் பின்னரான எதிர்பாராத மரணமும் மரணத்தின் பின்னுள்ள ஆன்மாவின் தேடலும் என்றவாறு பயணிக்கும் இக்கதை ஆரம்பம் முதல் முடிவு வரை நம்முள்ளே பொருத்தமான இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி நம்மை ஏற்றுக்கொள்ளச்செய்திருக்கும்.அல்லது மரணத்தின் பின்னரான வாழ்க்கை தொடர்பாக நாமாகவே ஒரு முடிவுக்கு வருமாறு சில கேள்விகளை தூண்டியிருக்கும்.

போதை தலைக்கேறிய ஆஸ்கார் தான் சுடப்பட்டு விட்டான் என்பது தொடர்பாக பிரக்ஞையற்று இப்படி கேட்பது என்னை கவர்ந்த ஒன்று.

“They shot me. Did they kill me? Did they shoot me? I’m just tripping, that’s what it is. It’s the DMT.”

இந்த மரணத்தையும் தாண்டி ரசிக்க வைத்த காட்சி லிண்டா(Linda) ஆஸ்காரின் (Oscar ) அன்பு. சகோதரர்களுக்கிடையிலான அன்பு நிலை கட்டுக்கடங்காமல் வெளிக்காட்டவே வேண்டிய ஒன்று.அது வார்த்தைகளாலோ அல்லது முத்தங்களால்,கட்டியணைத்தல்களால் பூரணப்படுத்த முயற்சி செய்யப்பட வேண்டும்.வழக்கமாக கேஸ்பர் நோ திரைப்படங்களில் காதல் காம விடயங்கள் விதிமீறியிருக்கும்.அதை புறக்கணிக்க முடியாமல் தட்டுத் தடுமாறி மனம் ஏற்றுக்கொள்ளும். அதே பதட்டத்தை இந்த சகோதரர்களின் அன்பு நிலையில் ஏற்படுத்தி விட்டிருப்பார்.முக்கியமாக தனக்கு மட்டும்தான் சொந்தம் என்னும் மன நிலை (possessive) இங்கு சகோதரர்களுக்கிடையில் மேலோட்டமாக நிகழ்த்தப்பட்டிருக்கும்.

முடிந்தால் நடிகனின் முகத்தை அவன் கண்ணாடியில் பார்க்கும் போது அவனுக்கே தெரியாமல் ஒரு முறை நீங்களும் பார்த்து விடுங்கள்.

Enter the Void 2009 Fantasy/Drama film

 Shame : 2011



தனிமையின் அந்தரங்கம் குறித்து யாருக்கும் எவ்வித வியாக்கியானங்களும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

மூன்றாவது நபர் நம் வாழ்வில் நுழையும் வரை, தன்னிச்சையான நம் செயல்கள் குறித்து எவ்விதக் குற்றவுணர்வுக்குள்ளாக வேண்டியதுமில்லை. மூன்றாவது நபர் நம்வாழ்வில் நுழையும்வரை, "வெட்கம்" என்றால் என்ன? என்பது குறித்து எவ்வித பிரக்ஞையுமற்று இருந்திருப்போம்.

நான் அறிந்து சமூகத்தில் பாதிக்கு மேலானவர்கள் வாழ்க்கை "தனிமையில் அந்தரங்கம் பேணியதாகவே" இருந்துவிடுகிறது. அது வெளிக்கொணரப்படும் தனி மனித,சமூகத்தை பொறுத்து சரியும் தவறும் நிர்ணயிக்கப்படுகிறது. இன்னும் காதலற்ற வெறுமனே சதைகளின் மீதான ஆர்வம் ஒன்றும் இந்த உலகிற்கு புதுமையான ஒன்றுமல்ல.

எந்தவொரு வன்மமும் திணிப்பும் "பாலியல் உறவுச்செயற்பாட்டில்" இல்லாதவரை;இங்கு குற்றம் என்று எதுவுமே இல்லை. வெட்கப்படவும் கூட ஒன்றும் இல்லை. ஏறத்தாழ அண்மித்த வயதிலுள்ள இரத்த உறவுகளின் அன்பு நிலையும்,புரிதல்களற்ற புறக்கணிப்புகளும் என்றுமே நான் தேடிப்பார்த்து அனுபவிக்கும் ஒன்று.

Shame (2011 Drama film/Erotic)
Director Steve McQueen

Blue is the warmest color : 2013



திரையில் என்றாலும் சரி. தெருவில் என்றாலும் சரி. வன்முறை காட்சிகளைப் பார்க்க தாராள மனம் இருக்கும் நமக்கு ஒருவர் மீது ஒருவர் அன்பைப்பரிமாறிக் கொள்வதை காண சகிக்க முடிவதில்லையே..!

அவரவர் உடல் அவரவர் உரிமை.அவரவர் பாலின தேர்வு கூட அவரவர் உரிமைதான்.மூன்றாம் நபரிடம் உரிமை கேட்டு கோஷம் போட்டு அனுமதி கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என்றுதான் சொல்வேன். அதே வேளை "பிறர் வேறுபட்டு வாழ உடன்படும்" மன நிலையை கூட வளர்த்துக்கொள்ள வேண்டும். வித்தியாசங்கள் கண்டால் கல்லால் அடிக்கும் மன நிலை தமிழரை விட்டகல நாட்கள் பல செல்லும்.

நம் சமூகத்தை பொறுத்த வரை, பெரும்பாலும் பாலியல் வரட்சியில் இருக்கும் ஆண்கள் மன நிலை தான் இங்கு பரிதாபமென தோன்றுகின்றது. "நாங்கெல்லாம் என்ன பாவம் செய்தோம்?" என்ற புலம்பல் இந்த பெண்கள் பெண்களை நாடிச் செல்வது குறித்து இருக்கிறது.

இருந்தாலும் ஆண்கள் ஆண்களை நாடிச்செல்லுதல் தொடர்பான அதிர்வு,பிரமிப்பு பெண்களைவிட குறைவாகத்தான் உள்ளது.மூன்றாம் பாலினம் குறித்து இங்கு யாருக்கும் எந்த கவலையும் இல்லை.

"தனக்கு மட்டுமே சொந்தம்" (Possessiveness) என்னும் உணர்வு இல்லாத காதல் எந்த அளவுக்கு உயிர்ப்புடன் இருக்கும் என்பது பற்றிய விவாதம் முடிவுக்கு கொண்டுவரப்படாத ஒன்றுதான்.

Blue is the warmest color (2013)
Director Abdellatif Kechiche

- அத்தியா -
Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, August 30, 2017

Science in the Courts(උසාවිය නිහඬය්)(மௌனித்த நீதிமன்றம்) – 2016: அதிகாரத்தின் துஷ்பிரயோகம்





சர்ச்சைக்குள்ளான அல்லது தடை செய்யப்பட்ட திரைப்படங்கள் மீதான ஆர்வங்கள் என்றுமே குறைவதில்லை.  சில உண்மைச் சம்பவங்களைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள்ஆவணப்படங்களைத் திரையிடும் செயற்பாடு அரசினால் அல்லது சமூகமதகலாசார நிறுவனங்களினால் தடை செய்யப்படுவது வழக்கமான ஒரு செயலாகிக்கொண்டு வருகிறது. மனிதர்கள் பல்வகைத்தன்மை கொண்டதோடு மனிதன் பற்றிய கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.யார் யார்  எப்போது என்ன வகையான மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு சிக்கலானவர்கள்.இந்தப் புதிரை அவிழ்ப்பதில் சங்கடங்களை எதிர்நோக்குவதுதான் மனித மனதின் யதார்த்த நிலை. இதை அறிந்து கொள்வது எக்காலத்திலும் கடினமான செயலாகவே இருந்துவிடுகின்றது.


காலங்காலமாக பாலியல் லஞ்சம் மற்றும் பாலியல் வல்லுறவு என்பன அதிகாரத்துஷ்பிரயோகத்தின் அங்கமாக இனமதமொழிநிற வேறுபாடின்றி அனைத்து சமூகங்களிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இது எந்த ஒரு மதமும்இனமும் மறுக்கவியலாத அப்பட்டமான உண்மை.இலங்கையிலும் இது விதிவிலக்கல்ல. சில உண்மைச் சம்பவங்களை பத்திரிகைகளில் மற்றும் செய்திகளில் அவதானிக்கின்ற போது, "எவ்வாறான மிருகத்தனமான சமூகங்களுக்கு மத்தியில் ஜீவித்துக் கொண்டிருக்கின்றோம்?" என்னும் வினாக்கள்  சலிப்புடன் தோன்றும். அப்படி இருந்தும் அதே சூழலில் ஒரு சில மனிதர்கள் சக மனித உணர்வுக்காக தமது உயிரையும் துச்சமாக மதித்து அவர்களுக்காக  போராட முன்வருகின்ற போதுதான் மனிதப்பிறவிக்கான இருப்பின் நியாயத்தை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அப்படியான, இன்னும் நீதி மறுக்கப்பட்ட ஒரு உண்மைச்சம்பவத்தின் ஆவணப்படம் பற்றி அண்மையில் அறியக்கிடைத்தது. இயக்குனர் "Prasanna Vithanage"(பிரசன்ன விதானகே) 2016 இல் இயக்கிய சிங்கள மொழி ஆவணப்படம் "Silence in the Courts"(சைலன்ஸ் இன் தி  கோர்ட்ஸ்).இது பற்றி பெரும்பாலும் ஊடகத்துறையினர் தவிர்த்து தமிழ் பேசும் சமூகங்கள் அறிந்திருக்க வாய்ப்பு குறைவாகவேயிருகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை பாரிய மொழி ரீதியான இன முரண்பாடு மறைமுகமாகவும் நேரடியாகவும் நடைமுறையில் இருப்பதனாலோ என்னவோ தமிழ் மொழி பேசும் தரப்பின் பெரும்பாலானோர் இது சிங்களவர் பிரச்சனை என கவனத்திற்கொள்ளாமல் புறக்கணித்திருக்கக்கூடும். ஊடகங்களும் அக்கறை காட்டாமல் தவிர்த்திருக்கக் கூடும். இங்கு மொழி, இனம் என்று நோக்காமல் "பெண்களுக்கெதிரான வன்முறைகள்" என்று நோக்குவோமேயானால் இது பாரியளவில் அதிகாரத்தில் உள்ளவர்களால் நிகழ்த்தப்படும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்பது அனைத்து இன மக்களுக்கும் தெளிவாகப் புரியும்.

 முஸ்லீம்தமிழ்ச் சமூகங்களைப் பொறுத்தவரை இதை விட மோசமான பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் அவர்களது சமூகத்தில் நிகழ்த்தப்பட்டாலும் அவை வெளிக்கொணரப்படும் வீதம் மிகக் குறைவு. மதம்கலாசாரம்சமூகக்கட்டமைப்பு என்று பெண்களை அதிகமாக மட்டந்தட்டி வீட்டில் அடைக்கும் சமூக நீட்சியே இன்னும் தொடர்கிறது. அல்லாவிட்டால் அந்தப் பெண்ணே குற்றவுணர்வு மேலோங்கி தற்கொலை செய்யத்தூண்டும் வண்ணம் குடும்பமும் சமூகமும் தங்களது திராணியற்ற தனத்தை துஷ்பிரயோகம் செய்த அதிகாரத்திலுள்ளவர்களிடம் காட்டாமல் தங்களது அறியாமையையும்இயலாமையையும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நிரூபித்துக்கொண்டிருக்கும் நிலைதான் இன்றும் நிலவி வருகின்றது.

சமூகத்தில்கல்வியில் உயர்ந்த தரத்தில் இருப்பவர்களிடம் "சிறந்த மனிதப்பண்பாடு" நிரம்பி இருக்கும் என்னும் பொது மையவோட்ட நம்பிக்கைதான் பெரும்பாலும் சாதாரண மனிதனைப் படுகுழியில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கின்றது. பாடசாலையில் ஆசிரியர் மாணவியை அல்லது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்குதல்பல்கலைக்கழக மாணவியை விரிவுரையாளர் துஷ்பிரயோகம் செய்தல் என்றவாறு நீண்டு செல்லும் இந்தச் சம்பவங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளவர்களில் சிலர் நிகழ்த்திவிட்டுகுறைந்த பட்ச தண்டனை கூட பெறாமல் சுதந்திரமாக திரியும் நிலை காணப்படுகிறது. இது போன்ற துஷ்பிரயோக செயலில் ஈடுபடுபவர்களினால் தான் பெண்கள் இன்றும் ஆண் துணையின்றி பெருவாரியான முயற்சிகளை தாமாக மேற்கொள்ளவியலாமல் ஊனமுற்றிருக்கும் நிலை காணப்படுகிறது. ஆணின்றி பெண்ணால் இயங்க முடியாது என்று சமூகத்திலுள்ளவர்கள் கூறிக்கொள்ள ஒரே ஒரு பெருங்காரணம் பெண்ணுடலுக்காக கழுகாக காத்திருக்கும் கீழ்த்தரமான ஆணாதிக்கவாத செயற்பாடுகள்தான். நமது சமூகத்தில் பாலின வேறுபாட்டை மையப்படுத்தி பேசுவோமேயானால் இங்கு பெண்ணுக்கு பாதுகாப்பும் ஆண்தான்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதும் பெருவாரியாக ஆண்தான்.

இந்த ஆவணத்திரைப்படம் பற்றி விளக்க முன்னர் இலங்கையின் முக்கியமான ஒரு ஊடகவியலாளர்எழுத்தாளர்மற்றும் முன்னாள் ராவய பத்திரிகையாசிரியர் விக்டர் ஐவன் பற்றி அறிந்திருப்பது இவ்விடத்தில் பொருத்தமாக இருக்கும். "சைலன்ஸ் இன் த கோர்ட்" ஆவணப்படத்தின் காதாநாயகன் என்றே இவரை கருத இயலும். இவரைப்பற்றி எனக்கு சிறந்த அறிமுகத்தை தந்தவர் எனது நண்பனும் வசந்தம்  தொலைக்காட்சியின் நிகழ்ச்சித்தொகுப்பாளரும் மற்றும் ஊடகவியலாளருமான பிஷ்ரின் முகம்மட். அவர் பின்வருமாறு விக்டர் ஐவன் பற்றிக் கூறி இருந்தார்:

விக்டர் ஐவன்


"விக்டர் ஐவனை வாசிக்கத்தொடங்கி பல வருடங்கள் கடந்து விட்டன.அவரது புத்தகங்களாகட்டும்கட்டுரைகளாகட்டும்ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் எத்தனையோ புது விடயங்களை எனக்கு கற்றுத்தருகின்றன. இலங்கை ஊடகவியலாளர்களில் நான் பார்த்து வியந்து நிற்கும் தனித்துவமானவர். அவரது எழுத்துக்களில் பக்கச்சார்பைக் கண்டதேயில்லை. சிறுபான்மைச் சமூகத்தின் குரலாக பல இடங்களில் அவரது குரல் ஓங்கி ஒலித்துள்ளது. "பன்சலையில் புரட்சி" என்னும் அவரது நூல் என்னுள் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது. பிரசன்ன விதானகேயின் தயாரிப்பில் பல தடைகளை தாண்டி வெளிவந்த "மௌனித்த நீதிமன்றம்"උසාවිය නිහඬය්; Silence in the Court) ஆவணப்படம் பார்த்த பின்னர் விக்டர் ஐவன் மீது அளவுகடந்த மரியாதை உண்டாயிற்று. நீதிபதியை தன் பேனா ஆயுதத்தைக் கொண்டு சட்டத்தின் முன் நிறுத்திய ஒரு ஊடக ஜாம்பவானாக 20 வருடங்களுக்கு முன்னரே சாதித்துக்காட்டியவர் விக்டர் ஐவன். ஊடகம் என்பது இன்று மிகப்பெரும் ஆயுதம். ஆனால்இலங்கை போன்ற நாடுகளில் ஊடகங்கள் வெறும் செய்தி சொல்லிகளாகவும்அரசியல்வாதிகளின் ஊதுகுழலாகவுமே இருப்பதான குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில் 20 வருடங்களுக்கு முன்னரே ராவய பத்திரிகைக்கு பாதிக்கப்பட்ட குறித்த பெண் முறையிட வந்துள்ளார். அதனடிப்படையில் பெண்ணின் பாதிப்புக்கு காரணகர்த்தாவாக இருந்த நீதிபதியை நீதி தேவதையின் முன் நிறுத்தியது மாத்திரமல்லாமல் நீதிபதியின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டினார். ”

இவரது "Unfinished Struggle" என்னும் நூல் அரசியல் அதிகாரத்தின் முன்னே நீதித்துறை தன் சுயாதீனத்தன்மையை இழந்து நிற்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. அது மட்டுமன்றி நீதித்துறையில் உயர்பதவியில் இருப்பவர்களின் துர்நடத்தைகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. இன்னும் இவரது பேசப்பட வேண்டிய நூல்கள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகியுள்ளன. பத்திரிகைத்துறையில் குற்றப்புலனாய்வு பகுதியை சரிவர பயன்படுத்தி இருப்பவர் விக்டர் ஐவன். அவரது தேடல்ஆய்வுதைரியம் போன்றன உண்மையில் ஊடகத்துறையினருக்கான முன்னோடி என்றே பல இளம் ஊடகவியலாளர்கள் ஆத்மார்த்தமாகக் கருதுகிறார்கள்.

இந்த ஆவணப்படம்இரு பெண்களை அவர்களது சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நீதிபதி ஒருவர்  தனது அதிகாரத்தை பயன்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததையும்பாதிக்கப்பட்ட பெண்களின் கணவன்மார் இன்றும் அவரை பழிவாங்கத்துடிக்கும் மனோநிலையில் இருப்பதையும்இதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி வழங்கப்படுவதற்காக பாரிய முயற்சிகளை மேற்கொண்ட ஊடகத்துறையின் நடுநிலையான செயற்பாட்டையும்இன்றும் அந்த நீதிபதி தண்டிக்கப்படாமல் சுதந்திரமாகத் திரிவதையும் மற்றும்  இன்றய நீதித்துறையின் நெருக்கடியை மிகவும் அழுத்தமாகவும் , ஆதாரபூர்வமாகவும் பேசுகின்றது.


முதலாவது சம்பவம்

போதிய அறிவுப்பின்புலம் இல்லாதஇரு குழந்தைகளின் தாயான W.B.M கமலாவதி என்னும் பெண்1997 இல் மாகோ நீதிமன்றத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தன் கணவனை பிணையில் விடுவிக்க முயற்சி செய்து கொண்டிருக்கைய  காவல்துறையினர்,  வழக்கறிஞர் H.P.B தென்னக்கோன் உதவியுடன் லெனின் ரத்நாயக்க என்னும் மாகோ நீதிமன்ற நீதிபதி அந்த பெண்ணை ஏமாற்றிகம்பொல என்னும் ஊரில் விடுதி ஒன்றில் வைத்து அவளது மாதவிடாய் நாள் என்றும் பாராமல் அவளை துப்பாக்கி இருப்பதாக மிரட்டி ஒரே நாளில் நான்கு முறை வன்புணர்வு செய்தார். இதனை அடுத்து அந்தப் பெண் உடல்நலமற்று கணவனைக் காண சிறைக்குச் செல்லாமல் இருக்க கணவனுக்கு சந்தேகம் ஏற்படுகின்றது. பின்னர் வழக்கு நாளன்று வருகை தந்து கணவனிடம் நடந்தவற்றைக் கூற அவன் மிகவும் கோபம் கொண்டு அவளை அடித்து, "உனக்கும் எனக்கும் இனி எவ்வித உறவுமில்லை"என்று கூறி துரத்துகிறான். பின்னர் ஒரு நாள் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு சிறைச்சாலைக்கு வந்து தானும் பிள்ளைகளும் நஞ்சுண்ணப் போவதாக கூறஇதைத் தாங்காத கணவன் அவளை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான். பின்னர் அவனது மனைவிக்கு நிகழ்ந்த அநீதிக்காக நீதிபதியாக இருந்த லெனின் ரத்நாயக்கவை அசிங்கப்படுத்தி தாக்க முடிவு மேற்கொண்டு மலசலக்கழிவுகளை சேகரித்து ஒரு பையில் போட்டு வைத்துக்கொண்டதோடு கேஸ் நிரப்பப்பட்ட போத்தல் ஒன்றையும் எடுத்துக்கொண்டு நீதிமன்றத்தில் அத்துமீறி நுழைந்து நீதிபதியை சரமாரியாக தாக்கிபின்னர் சரணடைந்து பாரியளவில் அதிகாரிகளால் தண்டிக்கப்படுகிறான். இந்தச் சம்பவத்தின் பின்னர் 9 மாதம் கழித்து "ராவய" பத்திரிகை நிறுவனத்திடம் முறையிட சென்றுள்ளனர். அங்கே பத்திரிகையாசிரியர் விக்டர் ஐவனை சந்தித்து நடந்த அனைத்து விடயங்களையும் கூற அவர் ஊடகவியலாளர் வருண கருணாதிலக்கவிடம் கூறுகிறார். வருண அதனை நம்ப மறுத்து பின்னர் ஆதாரங்களைக் கொண்டு நம்பிஅந்த பெண்ணுக்காகவும்நீதித்துறையின் கீழ்த்தரமான செயலை கண்டித்தும் எழுத ஆரம்பிக்கிறார். அந்தச் சம்பவம் நடந்து 9 மாதங்களில் அந்தப் பெண் மூன்று அரச நிறுவனங்களுக்கு முறையிடச் சென்றுள்ளார். அத்தோடு ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார். யாருமே அதனைப் பொருட்படுத்தவில்லை. இறுதியில்தான் ஊடகத்துறையின் உதவியை நாடியுள்ளார் அப்பெண்மணி. அவர் முறைப்பாடு தாக்கல் செய்த மூன்று அமைப்புகளும் பின்வருமாறு.

1. நீதிச்சேவை ஆணைக்குழு (Judicial Service Commission)
2. வழக்குரைஞர் குழாம் சங்கம் (Bar Association)
3.மனித உரிமை முன்னேற்றத்திற்கான வழக்கறிஞர்கள் அமைப்பு (Lawyers Organizations for Development of Human rights) 

இவை தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் உறுதிப்படுத்திக்கொண்ட பின்விக்டர் ஐவன் 16 ஆகஸ்ட் 1997 இல் இதனை தனது பத்திரிகையில் பின்வரும் தலைப்பின் கீழ் பிரசுரித்தார்.

"Complaint of Grave Abuse of Power by a Juridical Officer"




இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக பல விடயங்களை விவாதம் செய்து அரச நீதித்துறையை கேள்வி கேட்கும் வண்ணம் பத்திரிகைகளில் கேலிச்சித்திரம் முதற்கொண்டு வெளிப்படையாகவே பிரசுரிக்க ஆரம்பித்தார் விக்டர் ஐவன். இதனால் அவரும் அரசினாலும் சமூகத்தினாலும் பல்வேறு இன்னல்களுக்குள்ளாக்கப்பட்டார். "Wayamba Group Of Buddhist Bhikkhu" என்னும் அமைப்பு விக்டர் ஐவனுக்கு எதிராக குரல்கொடுத்ததுடன் அவருடைய உருவ பொம்மைகளையும் எரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. இதன் பின்னர் இன்னும் லெனின் ரத்நாயக்க பற்றிய உண்மைத் தகவல்களை திரட்டும் முயற்சிகளில் இறங்கினார் விக்டர் ஐவன். இதன்போது இரண்டாவது சம்பவம் அவரைத் தேடி வந்தது. விக்டர் ஐவனின் தீவிர வாசகரான ரஞ்சித் நவரத்ன (Secretary of the People's Party) அவரைத் தொடர்புகொண்டு லெனின் ரத்நாயக்கவின் இன்னொரு பெண்ணின் மீதான வன்புணர்வுச்சம்பவம் பற்றி தெரியப்படுத்தினார்.

2.  இரண்டாவது சம்பவம்

Jayantha Gunavardana Manike (ஜயந்த குணவர்தன மனிக்கே) என்னும் பெண்ணும் இதேபோன்ற வன்முறைக்கு ஆளாகினாரென்பது தெரியவந்தது. அவரது கணவன் வழக்கின் உரிய தேதிக்கு நீதிமன்றத்துக்குச் செல்லாமல் விட்டுவிட்டார். அந்தப் பெண்கணவனுக்குப் பதிலாக வழக்குகளைத் தவறவிடாமல் நீதிமன்றத்துக்கு சென்றுகொண்டிருந்தார். வழக்கத்துக்கு மாறாக அனைத்து வழக்கு விசாரணைகளும் முடிவடைந்த பின்னர் இறுதியாகவே இந்த வழக்கு நீதிபதியின் தனிப்பட்ட அறையில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதன்போது நீதிமன்றத்தினுள் வைத்தே அந்த பெண் துப்பாக்கி முனையில் வன்புணரப்பட்டுள்ளார். அதிகாரத்தின் உச்சபட்ச மிலேச்சத்தனமான துஷ்பிரயோகமாக இதனைக் கொள்ள இயலும். இதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் கணவன் லெனின் ரத்நாயக்கவை கொல்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இன்றும் கூட கொல்லத்துடிக்கும் மனோநிலையில் ஆவேசம் மேலோங்கவுள்ளார் அந்தப் பெண்ணின் கணவன். குற்றவாளிக்கு உரிய தண்டனையை அரசு வழங்காவிட்டால் இந்த பாதிக்கப்பட்ட பெண்களின் கணவன்மார்களைப் போல ஆயுதமேந்தும்நிலை தோன்றுவது இயல்பானதுதானேஇந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்ற விக்டர் ஐவன் பின்வரும் தலைப்பின் கீழ்  இந்தச் சம்பவத்தையும் ராவய பத்திரிகையில் பிரசுரித்தார்.

"Magistrate Rapes Accused Woman in Courts Chamber"

இந்த சம்பவங்களின் பின்னர்நீதிபதியான லெனின் ரத்நாயக்க மீது ராவய பத்திரிகை குற்றஞ்சாட்டியமைக்காக 1999ம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி  அதி உயர் நீதிமன்றத்தில் மூன்று நபர்களைக்கொண்ட நீதிக்குழு ஒன்று விசாரணைக்காக நியமிக்கப்பட்டது. இதன் போது லெனின் ரத்நாயக்க மீது நான்கு குற்றங்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் அவரை உடனடி பணி நீக்கம் செய்வதற்குப் பதிலாக கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி வைத்தார்கள். மேலும் அவர்  இதன் போது அரை மாத சம்பளத்தை பெற்றுக்கொண்டு எந்தவித தண்டனையும் இன்றி இன்றும் சுற்றித்திரிந்து கொண்டிருக்கின்றார்.

இங்கே நீதி என்பது அதிகார பலம் தன்னகத்தே கொண்டவர்கள் தீர்மானிப்பதுதான்.” இந்த நாட்டிலுள்ள நீதி முறையில் பாரிய சிக்கல் நிலவிக்கொண்டிருப்பதனை இந்த சம்பவங்கள் மூலமாக அறியலாம். இதை பற்றி விக்டர் ஐவன் குறிப்பிடுகையில், "இந்த சம்பவங்களுக்காக எத்தனையோ ஆதாரங்களை சமர்ப்பித்தும்எத்தனையோ ஊடகங்களில் வெளிப்படையாக அம்பலப்படுத்தியும் கூட எந்த ஒரு நீதியும் கிடைக்கவில்லை. இப்படியிருக்க இந்த நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான சாதாரண  விளிம்பு நிலை மக்களின் வழக்கு நிலை எவ்வாறு  இருக்கும் என்பது கேள்விக்குரியதே" என்று கூறுகிறார்.

ஆவணப்படத்தின் இறுதியாக பின்வரும் விடயம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்:

"ராவய பத்திரிகையினால் நிரூபிக்கப்பட்ட குற்றத்தை மூடி மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பொது வழக்கறிஞர் ஷரத் நந்த சில்வா 1999ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க முன்னிலையில் தலைமை நீதிபதியாக (Chief Justice) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்."


மேலே கூறப்பட்ட வாசகத்தின் மூலம் நீதித்துறையின் சுதந்திரம் இறந்து போய்விட்டதனை நாம் உணரமுடியும். “Death to Freedom of Judiciary.”

இவ்வளவு மோசமான அநீதியை தைரியமாக வெளிக்கொண்டுவந்த இலங்கையின் திரைப்பட இயக்குனர் "பிரசன்ன விதானகே" பற்றிய சிறு அறிமுகமாவது இங்கே அவசியம். வழக்கமாக தமிழ்நாட்டு திரைப்படங்களை அப்படியே அச்சொட்டாக பின்பற்றும் கோமாளித்தனம் சிங்கள சினிமாப்போக்கில் விரவிக்காணப்படுகிறது. பிரசன்ன விதானகேசிங்கள சினிமாவுலகில் நம்பிகை தரும் ஒரு படைப்பாளி என்பதற்கு அவர் இதுவரை கொடுத்துள்ள திரைப்படைப்புக்களே சான்று. பொதுவாக இவரது திரைப்படங்கள் யதார்த்தமிக்க கலைத்துவமான படைப்பாக இருப்பவை. தேவையற்ற திணிப்புகள் அவற்றில்  காணப்படாது. குறிப்பாகதடை செய்யப்பட்ட அல்லது அதிக திரைப்பட விழாக்களில் பங்குபற்றியவையாக அவை காணப்படும். சைலன்ஸ் இன் த கோர்ட் ஆவணப்படத்துக்கு கூட இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முன்னாள் நீதியரசராக இருந்த லெனின் ரத்நாயக்க இந்த ஆவணப்படத்தைக் கண்டு நடுங்கி"இந்த ஆவணப்படம் வெளியானால் எனக்கு மட்டுமல்ல இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்புக்கே அபகீர்த்தி ஏற்படும்" என்று மனுவொன்றை தாக்கல்செய்திருந்தார். கொழும்பு மாவட்ட நீதிபதி எம்.ஏ.குணவர்தன இந்த ஆவணப்படம் பற்றி தீர்க்கமாக விசாரித்தபின்னர் இதன் மீதான தடை உத்தரவை நீக்கினார்.

"Death on a Full Moon Day" (1997)  என்ற பிரசன்ன விதானகேயினால் எழுதி இயக்கப்பட்ட திரைப்படம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க காலத்தில் இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்டு வெளிவரமுடியாது கிடப்பில் இருந்தது. எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அமைதியானஅழகான கிராமத்தில் தன்னுடைய தேவைகளோடு மட்டுமே வாழப்பழகிக் கொண்ட அந்த பூமியைக் கூட இந்த இனவாத யுத்தம் விட்டுவைக்கவில்லை என்பதை விமர்சன ரீதியாக இல்லாமல் வெறும் காட்சிகளினூடே காட்டிச் செல்கின்றது அவரது படம். இந்தப் படம் யார் பக்கம் என்று அனுமானிப்பதை விடஉண்மையின் பக்கம் என்பதே பொருத்தமாயிருக்கும்.




இந்தப் படம் சிறந்த இயக்குனருக்கான விருதுசிறந்த நடிகருக்கான விருது என்று பல விருதுகளைப் பெற்றுக்கொண்டது. 

அதே போன்று "With you Without You" என்னும் திரைப்படமும் பாரியளவில் பேசப்பட்ட ஒரு திரைப்படமே. பொதுவாக இவரது திரைப்படங்களில் வன்முறைகள் மற்றும் பாலின சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இன்னும் இங்கே குறிப்பிடாத அவரது பல சிறந்த திரைப்படங்களும் உண்டு.

ஆவணப்படத்தை நேர்த்தியாக கோர்த்து சுவாரசியமாக அதன் அழகியல் மற்றும் திரைமொழி  சிதையாமல்  பார்வையாளர்களுக்குப் புரியும் வண்ணம் கதை சொல்வதில் தான் ஆவணப்படத்தின்  வெற்றி தங்கியுள்ளது. ஐம்பத்து மூன்று நிமிடங்களைக் கொண்ட இந்த  ஆவணப்படத்தின் கதைகூறும் பாங்கானது சிங்கள மொழியில் அமைதியான பின்னணிக் குரலுடன் ஆரம்பித்து இறுதிவரை நகரும். தேவையான இடங்களில் பொருத்தமான இசையுடன்  சம்பவங்களை காட்சிப்படுத்தும் போது இன்னும் உயிரோட்டம் கொடுக்கப்பட்டிருக்கும்.


W.M 
கமலாவதியின் சம்பவத்தை ஒரு எளிமையான தோற்றமுடைய பெண்ணைக் கொண்டு நடிக்கவைத்திருப்பார் இயக்குனர். இரண்டு பிள்ளைகளை இழுத்துக்கொண்டு வேகமாக அலைந்து திரியும் அந்தப் பெண்ணின் பின்புறக்காட்சிகள் அவளது கையாலாகாத ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியிருக்கும். அதிகமான வன்புணர்வுபச்சாதாபத்தையோ அல்லது கண்ணீர் சிந்துவதையோ காட்சிப்படுத்தி பார்வையாளர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்திவிடாமல்அந்தப் பெண்ணின் குழப்பமான மனநிலை  முகபாவனையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.


அதே போல லெனின் ரத்நாயக்கவிற்கு பதிலாக வந்த நடிகர் கூட மிகவும் யதார்த்தமாக அந்த சிறு காட்சியில் பிரதிபலித்து இருப்பார். அதிக கதாபாத்திரங்களைத் தெரிவு செய்யாமல்அதற்குப் பதிலாக சித்திரங்களைக் காட்சிப்படுத்திபின்னணிக் குரல் கதையை இலகுவாகவும் சூசகமாகவும் மக்களிடம் கொண்டு சென்றிருப்பது இந்த ஆவணப்படத்தின் சிறப்பம்சம். உதாரணமாக உயர்நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக்குழு ஒவ்வொருவரையும் விசாரணை செய்யும் சம்பவத்தை எடுத்துக்கொண்டால்அந்தக் காட்சியில் நீதிபதி சித்திரமாக (Cartoon) காட்சிப்படுத்தப்பட்டிருப்பர். அந்த சித்திரத்திற்குப் பின்னால் அதிகாரத்தொனியில் கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கும்.

நீதித்துறை அதிகாரிக்கும் விக்டர் ஐவனுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலின்போது ஆங்கில உபதலைப்புகளையே திரையில் காட்சிப்படுத்தி இருப்பதனை காணமுடியும். பத்திரிகைகள் மற்றும் இன்ன பிற ஆதாரங்கள் அனைத்துமே தெளிவாக திரையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

சிங்கள சினிமாவுக்குள் பிரசன்ன விதானகே தனக்கே உரித்தான தனிப்பாணியில் தன் படைப்புகளை அழகியலுடன் நகர்த்திச் செல்பவர் என்பது அவரது திரைப்படங்களை பார்க்கும்  உலக சினிமா ரசிகர்களுக்கு இலகுவாக புரிந்திருக்கும். இவ்வாவணப்படமும் அவருக்குரிய தனித்தன்மையுடன் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதாக உள்ளது.

இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போதுபொது மக்களின் நீதிக்கான இறுதிக்கட்ட முயற்சியாக ஊடகத்துறையை அவர்கள் நாடியிருப்பதை அறியக்கூடியதாக இருகின்றது. மக்களுக்கான நீதி அரசிடமிருந்து கிடைக்காத போதும்அரசுக்கு எதிராகவே இருந்தாலும் கூட நடுநிலையாக சாதாரண மக்களுக்காக குரல்கொடுத்த விக்டர் ஐவனது துணிவு விபரிக்க முடியாத ஒன்று. நாளாந்த பத்திரிகைகள் அனைத்து சமூக மக்களிடமும் பரவலாக சென்றடைந்து நாட்டில் நிகழும் அரச அதிகாரங்களை எதிர்த்து கேள்விகளை எழுப்பி இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்றுமொழிவாதம்  இலங்கையைப் பொறுத்தவரையில் பெரிய சிக்கலாக  இருப்பதனாலோ என்னவோ இதனை தமிழ்ச்சமூக மக்கள் பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த சம்பவம் தொடர்பான  விக்டர் ஐவனது தொடர்ச்சியான பத்திரிகைச் செய்திகளையே தொகுத்து அதனை காட்சி மொழிப்படுத்தியிருக்கும் பிரசன்ன விதானகேயின் முன்னெடுப்பானது சிங்கள மொழி பேசும் மக்களிடம் மட்டுமன்றி ஏனைய பல்லின மக்களிடமும் இதனை வீரியமாகக் கொண்டு சேர்க்க உதவியுள்ளது.

இன்றைய நவீன யுகத்தில் வாசிப்பைக்காட்டிலும்  காட்சி ஊடகம்,படித்தவர் முதல் பாமரர்வரை அனைவரும் இலகுவில் புரிந்து உள்வாங்கிக் கொள்ளக்கூடியது என்னும்வகையில்   விக்டர் ஐவன் தனது பத்திரிகை பலத்தை பயன்படுத்தி குறித்த சம்பவத்தை இலங்கைச் சூழலை மையப்படுத்தி முடிந்தவரை அம்பலப்படுத்தி இருப்பார். ஆனால் பிரசன்ன விதானகே அந்த பத்திரிகைகளையே தொகுத்துவிக்டர் ஐவனையே அந்த ஆவணப்படத்தின் பிரதான  சாட்சியாக நிறுவிசம்பவங்களை காட்சிப்படுத்திஆங்கில உபதலைப்புகளுடன் கூடிய ஆவணப்படமாக உருவாக்கி உலகளாவிய ரீதியில் இலங்கை நீதித்துறையின் கையாலாகாத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி இருப்பார்.


இந்த ஆவணப்படத்தில் உள்ள சம்பவங்களைப் போன்று இன்னும் எத்தனையோ சம்பவங்கள் இலங்கையில் பல இடங்களில் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.  மென்மேலும் புறக்கணிக்கப்பட்ட சமூகத்திற்கு வெளிப்படாமலே மறைந்துள்ளன. இயக்குனர் பிரசன்ன விதானகே போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்காக துணிவுடன் குரல்கொடுக்கும்திரைப்பட  இயக்குனர்கள் இலங்கையைப் பொறுத்தவரை தமிழ்ச்சமூகத்தில்  இன்னும் உருவாகவேயில்லை என்பதே நிதர்சனம்.


- அத்தியா - புதிய சொல் : 'ஏப்பிரல் - ஜீன்இதழில் வெளியாகிய கட்டுரை

Share This:   FacebookTwitterGoogle+

Blog Archive

Followers

About Me

My photo
"வாழ்வெனும் கங்குலை புரிந்து கொள்ளத்துடிக்கும் மின்மினி இவள்"
Copyright © மின்மினி |