Thursday, August 31, 2017

உலகசினிமா அறிமுகக் குறிப்புகள்

Like Someone In Love : 2012



இந்த வயதில் இவ்வாறான ஆசையெல்லாம் தேவையா ? என்று பொங்குபவர்கள் பொங்கட்டும்.நான் சொல்லவந்ததை சொல்லி விட்டு போகிறேன்என்றவாறு இலக்கிய நயத்துடன் மிகவும் எளிமையாக, இன்னும் மனித மனங்களில் ஆழமான தாக்கங்களைத் தோற்றுவிக்கும் கதையை இறுதியாக சொல்லி விட்டு மறைந்தார் இயக்குநர் (Abbas Kiarostami) அப்பாஸ் கியரோஸ்தமி.

இதில் வரும் காட்சி நுண்ணறிவு உண்மயிலேயே பிரம்மிக்க வைத்தது.திரைப்படத்தில் நாம் ப்ரேமிற்குள் (Frame) பார்க்கும் விடயங்களை விட ப்ரேமிற்கு வெளியில் நடக்கும் நம்மால் பார்க்க முடியாத விடங்கள் மிகவும் முக்கியமானதுஎன்பதை இத்திரைப்படத்தில் ஆரம்ப காட்சி உணர்த்தியது.

திடீரென ஏற்படும் பெயரற்ற உறவுகளின் அன்பு,கரிசனம்,புரிதல்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும் அந்த உறவால் வெளியில் இருந்து ஏற்படும் சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதென்பது சிரமானதுதான். வழக்கமான காதல் கதை ஒன்றுதான் வெறித்தனமாக பின் தொடர்ந்து வன்முறை நிகழ்த்துகின்றது.

மிக எளிமையான முகமூடிகளைக் கொண்டு மனதின் தீவிரமான சிக்கல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு சந்தேகமும் நியாயப்படுத்தப்படுகின்றது. இதயத்தின் இருண்டபக்கத்தின் அழகு எந்தவித மாயத்தோற்றத்தையும் தராமல், இருந்தாலும் ஒரு சிறு மயக்கத்தையும் இலக்கியத்திற்கான அழகையும் கொண்டு பேசுகிறது.

Like Someone In Love (2012 Drama film)


Enter the Void : 2009 



மரணத்திற்கு பின்னரான வாழ்வு பற்றிய புரிதல் மதங்களின் நம்பிக்கையற்ற புராண கதைகளை விட போதை தலைக்கேறிய தத்துவவாதிகள் சொல்வது அதீதமான சிலிர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.நிச்சயமாக தத்துவங்களைப் புறக்கணிக்கும் மனப்பான்மை மிகவும் அரிது.மரணித்த பின் எம் ஆன்மா உடலை விட்டு எங்கு போகும்? என்ன செய்யும்? இதை ஒரு பரிசோதனையாகவே,போதை தலைக்கேறிய ஒருவனின் மரணத்தின் பின்னரான அவனது ஆன்மாவின் பார்வையில் இருந்து அவனது உலகை நமக்கு காண்பிக்கிறது.

உலக வாழ்வு பற்றிய முழுமையான புரிதலும் அனுபவமும் கிடைக்கின்ற போது இவ்வுலகிலி்ருந்து சற்று ஆன்மாவை அப்புறப்படுத்திப்பார்க்க ஆசை வரலாம்.சில சமயம் "என்னடா வாழ்க்கை இது?" என்று புரியாமல் புலம்புபவர்களுக்கும் தோன்றலாம்.அந்தவகையில் ஆன்மாவின் ஒரு விடுதலைதான் போதைப்பாவனையாக எனக்குத்தோன்றியது.பெரும்பாலான தத்துவதாதிகளின் இத்தகைய நிலையில் புதுமை ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.

ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஆழமாக பதிந்துள்ள ஒரு சிக்கலுக்கு தீர்வு காண முயற்சிக்கும் செயற்பாடுதான் இயக்குனர் மேற்கொண்டது.ஆரம்பத்தில் "The Book of the Dead" என்னும் புத்தகத்தை வாசிக்குமாறு தூண்டபடுவதும்,அதன் பின்னரான எதிர்பாராத மரணமும் மரணத்தின் பின்னுள்ள ஆன்மாவின் தேடலும் என்றவாறு பயணிக்கும் இக்கதை ஆரம்பம் முதல் முடிவு வரை நம்முள்ளே பொருத்தமான இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி நம்மை ஏற்றுக்கொள்ளச்செய்திருக்கும்.அல்லது மரணத்தின் பின்னரான வாழ்க்கை தொடர்பாக நாமாகவே ஒரு முடிவுக்கு வருமாறு சில கேள்விகளை தூண்டியிருக்கும்.

போதை தலைக்கேறிய ஆஸ்கார் தான் சுடப்பட்டு விட்டான் என்பது தொடர்பாக பிரக்ஞையற்று இப்படி கேட்பது என்னை கவர்ந்த ஒன்று.

“They shot me. Did they kill me? Did they shoot me? I’m just tripping, that’s what it is. It’s the DMT.”

இந்த மரணத்தையும் தாண்டி ரசிக்க வைத்த காட்சி லிண்டா(Linda) ஆஸ்காரின் (Oscar ) அன்பு. சகோதரர்களுக்கிடையிலான அன்பு நிலை கட்டுக்கடங்காமல் வெளிக்காட்டவே வேண்டிய ஒன்று.அது வார்த்தைகளாலோ அல்லது முத்தங்களால்,கட்டியணைத்தல்களால் பூரணப்படுத்த முயற்சி செய்யப்பட வேண்டும்.வழக்கமாக கேஸ்பர் நோ திரைப்படங்களில் காதல் காம விடயங்கள் விதிமீறியிருக்கும்.அதை புறக்கணிக்க முடியாமல் தட்டுத் தடுமாறி மனம் ஏற்றுக்கொள்ளும். அதே பதட்டத்தை இந்த சகோதரர்களின் அன்பு நிலையில் ஏற்படுத்தி விட்டிருப்பார்.முக்கியமாக தனக்கு மட்டும்தான் சொந்தம் என்னும் மன நிலை (possessive) இங்கு சகோதரர்களுக்கிடையில் மேலோட்டமாக நிகழ்த்தப்பட்டிருக்கும்.

முடிந்தால் நடிகனின் முகத்தை அவன் கண்ணாடியில் பார்க்கும் போது அவனுக்கே தெரியாமல் ஒரு முறை நீங்களும் பார்த்து விடுங்கள்.

Enter the Void 2009 Fantasy/Drama film

 Shame : 2011



தனிமையின் அந்தரங்கம் குறித்து யாருக்கும் எவ்வித வியாக்கியானங்களும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

மூன்றாவது நபர் நம் வாழ்வில் நுழையும் வரை, தன்னிச்சையான நம் செயல்கள் குறித்து எவ்விதக் குற்றவுணர்வுக்குள்ளாக வேண்டியதுமில்லை. மூன்றாவது நபர் நம்வாழ்வில் நுழையும்வரை, "வெட்கம்" என்றால் என்ன? என்பது குறித்து எவ்வித பிரக்ஞையுமற்று இருந்திருப்போம்.

நான் அறிந்து சமூகத்தில் பாதிக்கு மேலானவர்கள் வாழ்க்கை "தனிமையில் அந்தரங்கம் பேணியதாகவே" இருந்துவிடுகிறது. அது வெளிக்கொணரப்படும் தனி மனித,சமூகத்தை பொறுத்து சரியும் தவறும் நிர்ணயிக்கப்படுகிறது. இன்னும் காதலற்ற வெறுமனே சதைகளின் மீதான ஆர்வம் ஒன்றும் இந்த உலகிற்கு புதுமையான ஒன்றுமல்ல.

எந்தவொரு வன்மமும் திணிப்பும் "பாலியல் உறவுச்செயற்பாட்டில்" இல்லாதவரை;இங்கு குற்றம் என்று எதுவுமே இல்லை. வெட்கப்படவும் கூட ஒன்றும் இல்லை. ஏறத்தாழ அண்மித்த வயதிலுள்ள இரத்த உறவுகளின் அன்பு நிலையும்,புரிதல்களற்ற புறக்கணிப்புகளும் என்றுமே நான் தேடிப்பார்த்து அனுபவிக்கும் ஒன்று.

Shame (2011 Drama film/Erotic)
Director Steve McQueen

Blue is the warmest color : 2013



திரையில் என்றாலும் சரி. தெருவில் என்றாலும் சரி. வன்முறை காட்சிகளைப் பார்க்க தாராள மனம் இருக்கும் நமக்கு ஒருவர் மீது ஒருவர் அன்பைப்பரிமாறிக் கொள்வதை காண சகிக்க முடிவதில்லையே..!

அவரவர் உடல் அவரவர் உரிமை.அவரவர் பாலின தேர்வு கூட அவரவர் உரிமைதான்.மூன்றாம் நபரிடம் உரிமை கேட்டு கோஷம் போட்டு அனுமதி கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என்றுதான் சொல்வேன். அதே வேளை "பிறர் வேறுபட்டு வாழ உடன்படும்" மன நிலையை கூட வளர்த்துக்கொள்ள வேண்டும். வித்தியாசங்கள் கண்டால் கல்லால் அடிக்கும் மன நிலை தமிழரை விட்டகல நாட்கள் பல செல்லும்.

நம் சமூகத்தை பொறுத்த வரை, பெரும்பாலும் பாலியல் வரட்சியில் இருக்கும் ஆண்கள் மன நிலை தான் இங்கு பரிதாபமென தோன்றுகின்றது. "நாங்கெல்லாம் என்ன பாவம் செய்தோம்?" என்ற புலம்பல் இந்த பெண்கள் பெண்களை நாடிச் செல்வது குறித்து இருக்கிறது.

இருந்தாலும் ஆண்கள் ஆண்களை நாடிச்செல்லுதல் தொடர்பான அதிர்வு,பிரமிப்பு பெண்களைவிட குறைவாகத்தான் உள்ளது.மூன்றாம் பாலினம் குறித்து இங்கு யாருக்கும் எந்த கவலையும் இல்லை.

"தனக்கு மட்டுமே சொந்தம்" (Possessiveness) என்னும் உணர்வு இல்லாத காதல் எந்த அளவுக்கு உயிர்ப்புடன் இருக்கும் என்பது பற்றிய விவாதம் முடிவுக்கு கொண்டுவரப்படாத ஒன்றுதான்.

Blue is the warmest color (2013)
Director Abdellatif Kechiche

- அத்தியா -
Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, August 30, 2017

Science in the Courts(උසාවිය නිහඬය්)(மௌனித்த நீதிமன்றம்) – 2016: அதிகாரத்தின் துஷ்பிரயோகம்





சர்ச்சைக்குள்ளான அல்லது தடை செய்யப்பட்ட திரைப்படங்கள் மீதான ஆர்வங்கள் என்றுமே குறைவதில்லை.  சில உண்மைச் சம்பவங்களைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள்ஆவணப்படங்களைத் திரையிடும் செயற்பாடு அரசினால் அல்லது சமூகமதகலாசார நிறுவனங்களினால் தடை செய்யப்படுவது வழக்கமான ஒரு செயலாகிக்கொண்டு வருகிறது. மனிதர்கள் பல்வகைத்தன்மை கொண்டதோடு மனிதன் பற்றிய கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.யார் யார்  எப்போது என்ன வகையான மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு சிக்கலானவர்கள்.இந்தப் புதிரை அவிழ்ப்பதில் சங்கடங்களை எதிர்நோக்குவதுதான் மனித மனதின் யதார்த்த நிலை. இதை அறிந்து கொள்வது எக்காலத்திலும் கடினமான செயலாகவே இருந்துவிடுகின்றது.


காலங்காலமாக பாலியல் லஞ்சம் மற்றும் பாலியல் வல்லுறவு என்பன அதிகாரத்துஷ்பிரயோகத்தின் அங்கமாக இனமதமொழிநிற வேறுபாடின்றி அனைத்து சமூகங்களிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இது எந்த ஒரு மதமும்இனமும் மறுக்கவியலாத அப்பட்டமான உண்மை.இலங்கையிலும் இது விதிவிலக்கல்ல. சில உண்மைச் சம்பவங்களை பத்திரிகைகளில் மற்றும் செய்திகளில் அவதானிக்கின்ற போது, "எவ்வாறான மிருகத்தனமான சமூகங்களுக்கு மத்தியில் ஜீவித்துக் கொண்டிருக்கின்றோம்?" என்னும் வினாக்கள்  சலிப்புடன் தோன்றும். அப்படி இருந்தும் அதே சூழலில் ஒரு சில மனிதர்கள் சக மனித உணர்வுக்காக தமது உயிரையும் துச்சமாக மதித்து அவர்களுக்காக  போராட முன்வருகின்ற போதுதான் மனிதப்பிறவிக்கான இருப்பின் நியாயத்தை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அப்படியான, இன்னும் நீதி மறுக்கப்பட்ட ஒரு உண்மைச்சம்பவத்தின் ஆவணப்படம் பற்றி அண்மையில் அறியக்கிடைத்தது. இயக்குனர் "Prasanna Vithanage"(பிரசன்ன விதானகே) 2016 இல் இயக்கிய சிங்கள மொழி ஆவணப்படம் "Silence in the Courts"(சைலன்ஸ் இன் தி  கோர்ட்ஸ்).இது பற்றி பெரும்பாலும் ஊடகத்துறையினர் தவிர்த்து தமிழ் பேசும் சமூகங்கள் அறிந்திருக்க வாய்ப்பு குறைவாகவேயிருகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை பாரிய மொழி ரீதியான இன முரண்பாடு மறைமுகமாகவும் நேரடியாகவும் நடைமுறையில் இருப்பதனாலோ என்னவோ தமிழ் மொழி பேசும் தரப்பின் பெரும்பாலானோர் இது சிங்களவர் பிரச்சனை என கவனத்திற்கொள்ளாமல் புறக்கணித்திருக்கக்கூடும். ஊடகங்களும் அக்கறை காட்டாமல் தவிர்த்திருக்கக் கூடும். இங்கு மொழி, இனம் என்று நோக்காமல் "பெண்களுக்கெதிரான வன்முறைகள்" என்று நோக்குவோமேயானால் இது பாரியளவில் அதிகாரத்தில் உள்ளவர்களால் நிகழ்த்தப்படும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்பது அனைத்து இன மக்களுக்கும் தெளிவாகப் புரியும்.

 முஸ்லீம்தமிழ்ச் சமூகங்களைப் பொறுத்தவரை இதை விட மோசமான பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் அவர்களது சமூகத்தில் நிகழ்த்தப்பட்டாலும் அவை வெளிக்கொணரப்படும் வீதம் மிகக் குறைவு. மதம்கலாசாரம்சமூகக்கட்டமைப்பு என்று பெண்களை அதிகமாக மட்டந்தட்டி வீட்டில் அடைக்கும் சமூக நீட்சியே இன்னும் தொடர்கிறது. அல்லாவிட்டால் அந்தப் பெண்ணே குற்றவுணர்வு மேலோங்கி தற்கொலை செய்யத்தூண்டும் வண்ணம் குடும்பமும் சமூகமும் தங்களது திராணியற்ற தனத்தை துஷ்பிரயோகம் செய்த அதிகாரத்திலுள்ளவர்களிடம் காட்டாமல் தங்களது அறியாமையையும்இயலாமையையும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நிரூபித்துக்கொண்டிருக்கும் நிலைதான் இன்றும் நிலவி வருகின்றது.

சமூகத்தில்கல்வியில் உயர்ந்த தரத்தில் இருப்பவர்களிடம் "சிறந்த மனிதப்பண்பாடு" நிரம்பி இருக்கும் என்னும் பொது மையவோட்ட நம்பிக்கைதான் பெரும்பாலும் சாதாரண மனிதனைப் படுகுழியில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கின்றது. பாடசாலையில் ஆசிரியர் மாணவியை அல்லது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்குதல்பல்கலைக்கழக மாணவியை விரிவுரையாளர் துஷ்பிரயோகம் செய்தல் என்றவாறு நீண்டு செல்லும் இந்தச் சம்பவங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளவர்களில் சிலர் நிகழ்த்திவிட்டுகுறைந்த பட்ச தண்டனை கூட பெறாமல் சுதந்திரமாக திரியும் நிலை காணப்படுகிறது. இது போன்ற துஷ்பிரயோக செயலில் ஈடுபடுபவர்களினால் தான் பெண்கள் இன்றும் ஆண் துணையின்றி பெருவாரியான முயற்சிகளை தாமாக மேற்கொள்ளவியலாமல் ஊனமுற்றிருக்கும் நிலை காணப்படுகிறது. ஆணின்றி பெண்ணால் இயங்க முடியாது என்று சமூகத்திலுள்ளவர்கள் கூறிக்கொள்ள ஒரே ஒரு பெருங்காரணம் பெண்ணுடலுக்காக கழுகாக காத்திருக்கும் கீழ்த்தரமான ஆணாதிக்கவாத செயற்பாடுகள்தான். நமது சமூகத்தில் பாலின வேறுபாட்டை மையப்படுத்தி பேசுவோமேயானால் இங்கு பெண்ணுக்கு பாதுகாப்பும் ஆண்தான்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதும் பெருவாரியாக ஆண்தான்.

இந்த ஆவணத்திரைப்படம் பற்றி விளக்க முன்னர் இலங்கையின் முக்கியமான ஒரு ஊடகவியலாளர்எழுத்தாளர்மற்றும் முன்னாள் ராவய பத்திரிகையாசிரியர் விக்டர் ஐவன் பற்றி அறிந்திருப்பது இவ்விடத்தில் பொருத்தமாக இருக்கும். "சைலன்ஸ் இன் த கோர்ட்" ஆவணப்படத்தின் காதாநாயகன் என்றே இவரை கருத இயலும். இவரைப்பற்றி எனக்கு சிறந்த அறிமுகத்தை தந்தவர் எனது நண்பனும் வசந்தம்  தொலைக்காட்சியின் நிகழ்ச்சித்தொகுப்பாளரும் மற்றும் ஊடகவியலாளருமான பிஷ்ரின் முகம்மட். அவர் பின்வருமாறு விக்டர் ஐவன் பற்றிக் கூறி இருந்தார்:

விக்டர் ஐவன்


"விக்டர் ஐவனை வாசிக்கத்தொடங்கி பல வருடங்கள் கடந்து விட்டன.அவரது புத்தகங்களாகட்டும்கட்டுரைகளாகட்டும்ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் எத்தனையோ புது விடயங்களை எனக்கு கற்றுத்தருகின்றன. இலங்கை ஊடகவியலாளர்களில் நான் பார்த்து வியந்து நிற்கும் தனித்துவமானவர். அவரது எழுத்துக்களில் பக்கச்சார்பைக் கண்டதேயில்லை. சிறுபான்மைச் சமூகத்தின் குரலாக பல இடங்களில் அவரது குரல் ஓங்கி ஒலித்துள்ளது. "பன்சலையில் புரட்சி" என்னும் அவரது நூல் என்னுள் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது. பிரசன்ன விதானகேயின் தயாரிப்பில் பல தடைகளை தாண்டி வெளிவந்த "மௌனித்த நீதிமன்றம்"උසාවිය නිහඬය්; Silence in the Court) ஆவணப்படம் பார்த்த பின்னர் விக்டர் ஐவன் மீது அளவுகடந்த மரியாதை உண்டாயிற்று. நீதிபதியை தன் பேனா ஆயுதத்தைக் கொண்டு சட்டத்தின் முன் நிறுத்திய ஒரு ஊடக ஜாம்பவானாக 20 வருடங்களுக்கு முன்னரே சாதித்துக்காட்டியவர் விக்டர் ஐவன். ஊடகம் என்பது இன்று மிகப்பெரும் ஆயுதம். ஆனால்இலங்கை போன்ற நாடுகளில் ஊடகங்கள் வெறும் செய்தி சொல்லிகளாகவும்அரசியல்வாதிகளின் ஊதுகுழலாகவுமே இருப்பதான குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில் 20 வருடங்களுக்கு முன்னரே ராவய பத்திரிகைக்கு பாதிக்கப்பட்ட குறித்த பெண் முறையிட வந்துள்ளார். அதனடிப்படையில் பெண்ணின் பாதிப்புக்கு காரணகர்த்தாவாக இருந்த நீதிபதியை நீதி தேவதையின் முன் நிறுத்தியது மாத்திரமல்லாமல் நீதிபதியின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டினார். ”

இவரது "Unfinished Struggle" என்னும் நூல் அரசியல் அதிகாரத்தின் முன்னே நீதித்துறை தன் சுயாதீனத்தன்மையை இழந்து நிற்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. அது மட்டுமன்றி நீதித்துறையில் உயர்பதவியில் இருப்பவர்களின் துர்நடத்தைகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. இன்னும் இவரது பேசப்பட வேண்டிய நூல்கள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகியுள்ளன. பத்திரிகைத்துறையில் குற்றப்புலனாய்வு பகுதியை சரிவர பயன்படுத்தி இருப்பவர் விக்டர் ஐவன். அவரது தேடல்ஆய்வுதைரியம் போன்றன உண்மையில் ஊடகத்துறையினருக்கான முன்னோடி என்றே பல இளம் ஊடகவியலாளர்கள் ஆத்மார்த்தமாகக் கருதுகிறார்கள்.

இந்த ஆவணப்படம்இரு பெண்களை அவர்களது சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நீதிபதி ஒருவர்  தனது அதிகாரத்தை பயன்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததையும்பாதிக்கப்பட்ட பெண்களின் கணவன்மார் இன்றும் அவரை பழிவாங்கத்துடிக்கும் மனோநிலையில் இருப்பதையும்இதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி வழங்கப்படுவதற்காக பாரிய முயற்சிகளை மேற்கொண்ட ஊடகத்துறையின் நடுநிலையான செயற்பாட்டையும்இன்றும் அந்த நீதிபதி தண்டிக்கப்படாமல் சுதந்திரமாகத் திரிவதையும் மற்றும்  இன்றய நீதித்துறையின் நெருக்கடியை மிகவும் அழுத்தமாகவும் , ஆதாரபூர்வமாகவும் பேசுகின்றது.


முதலாவது சம்பவம்

போதிய அறிவுப்பின்புலம் இல்லாதஇரு குழந்தைகளின் தாயான W.B.M கமலாவதி என்னும் பெண்1997 இல் மாகோ நீதிமன்றத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தன் கணவனை பிணையில் விடுவிக்க முயற்சி செய்து கொண்டிருக்கைய  காவல்துறையினர்,  வழக்கறிஞர் H.P.B தென்னக்கோன் உதவியுடன் லெனின் ரத்நாயக்க என்னும் மாகோ நீதிமன்ற நீதிபதி அந்த பெண்ணை ஏமாற்றிகம்பொல என்னும் ஊரில் விடுதி ஒன்றில் வைத்து அவளது மாதவிடாய் நாள் என்றும் பாராமல் அவளை துப்பாக்கி இருப்பதாக மிரட்டி ஒரே நாளில் நான்கு முறை வன்புணர்வு செய்தார். இதனை அடுத்து அந்தப் பெண் உடல்நலமற்று கணவனைக் காண சிறைக்குச் செல்லாமல் இருக்க கணவனுக்கு சந்தேகம் ஏற்படுகின்றது. பின்னர் வழக்கு நாளன்று வருகை தந்து கணவனிடம் நடந்தவற்றைக் கூற அவன் மிகவும் கோபம் கொண்டு அவளை அடித்து, "உனக்கும் எனக்கும் இனி எவ்வித உறவுமில்லை"என்று கூறி துரத்துகிறான். பின்னர் ஒரு நாள் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு சிறைச்சாலைக்கு வந்து தானும் பிள்ளைகளும் நஞ்சுண்ணப் போவதாக கூறஇதைத் தாங்காத கணவன் அவளை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான். பின்னர் அவனது மனைவிக்கு நிகழ்ந்த அநீதிக்காக நீதிபதியாக இருந்த லெனின் ரத்நாயக்கவை அசிங்கப்படுத்தி தாக்க முடிவு மேற்கொண்டு மலசலக்கழிவுகளை சேகரித்து ஒரு பையில் போட்டு வைத்துக்கொண்டதோடு கேஸ் நிரப்பப்பட்ட போத்தல் ஒன்றையும் எடுத்துக்கொண்டு நீதிமன்றத்தில் அத்துமீறி நுழைந்து நீதிபதியை சரமாரியாக தாக்கிபின்னர் சரணடைந்து பாரியளவில் அதிகாரிகளால் தண்டிக்கப்படுகிறான். இந்தச் சம்பவத்தின் பின்னர் 9 மாதம் கழித்து "ராவய" பத்திரிகை நிறுவனத்திடம் முறையிட சென்றுள்ளனர். அங்கே பத்திரிகையாசிரியர் விக்டர் ஐவனை சந்தித்து நடந்த அனைத்து விடயங்களையும் கூற அவர் ஊடகவியலாளர் வருண கருணாதிலக்கவிடம் கூறுகிறார். வருண அதனை நம்ப மறுத்து பின்னர் ஆதாரங்களைக் கொண்டு நம்பிஅந்த பெண்ணுக்காகவும்நீதித்துறையின் கீழ்த்தரமான செயலை கண்டித்தும் எழுத ஆரம்பிக்கிறார். அந்தச் சம்பவம் நடந்து 9 மாதங்களில் அந்தப் பெண் மூன்று அரச நிறுவனங்களுக்கு முறையிடச் சென்றுள்ளார். அத்தோடு ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார். யாருமே அதனைப் பொருட்படுத்தவில்லை. இறுதியில்தான் ஊடகத்துறையின் உதவியை நாடியுள்ளார் அப்பெண்மணி. அவர் முறைப்பாடு தாக்கல் செய்த மூன்று அமைப்புகளும் பின்வருமாறு.

1. நீதிச்சேவை ஆணைக்குழு (Judicial Service Commission)
2. வழக்குரைஞர் குழாம் சங்கம் (Bar Association)
3.மனித உரிமை முன்னேற்றத்திற்கான வழக்கறிஞர்கள் அமைப்பு (Lawyers Organizations for Development of Human rights) 

இவை தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் உறுதிப்படுத்திக்கொண்ட பின்விக்டர் ஐவன் 16 ஆகஸ்ட் 1997 இல் இதனை தனது பத்திரிகையில் பின்வரும் தலைப்பின் கீழ் பிரசுரித்தார்.

"Complaint of Grave Abuse of Power by a Juridical Officer"




இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக பல விடயங்களை விவாதம் செய்து அரச நீதித்துறையை கேள்வி கேட்கும் வண்ணம் பத்திரிகைகளில் கேலிச்சித்திரம் முதற்கொண்டு வெளிப்படையாகவே பிரசுரிக்க ஆரம்பித்தார் விக்டர் ஐவன். இதனால் அவரும் அரசினாலும் சமூகத்தினாலும் பல்வேறு இன்னல்களுக்குள்ளாக்கப்பட்டார். "Wayamba Group Of Buddhist Bhikkhu" என்னும் அமைப்பு விக்டர் ஐவனுக்கு எதிராக குரல்கொடுத்ததுடன் அவருடைய உருவ பொம்மைகளையும் எரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. இதன் பின்னர் இன்னும் லெனின் ரத்நாயக்க பற்றிய உண்மைத் தகவல்களை திரட்டும் முயற்சிகளில் இறங்கினார் விக்டர் ஐவன். இதன்போது இரண்டாவது சம்பவம் அவரைத் தேடி வந்தது. விக்டர் ஐவனின் தீவிர வாசகரான ரஞ்சித் நவரத்ன (Secretary of the People's Party) அவரைத் தொடர்புகொண்டு லெனின் ரத்நாயக்கவின் இன்னொரு பெண்ணின் மீதான வன்புணர்வுச்சம்பவம் பற்றி தெரியப்படுத்தினார்.

2.  இரண்டாவது சம்பவம்

Jayantha Gunavardana Manike (ஜயந்த குணவர்தன மனிக்கே) என்னும் பெண்ணும் இதேபோன்ற வன்முறைக்கு ஆளாகினாரென்பது தெரியவந்தது. அவரது கணவன் வழக்கின் உரிய தேதிக்கு நீதிமன்றத்துக்குச் செல்லாமல் விட்டுவிட்டார். அந்தப் பெண்கணவனுக்குப் பதிலாக வழக்குகளைத் தவறவிடாமல் நீதிமன்றத்துக்கு சென்றுகொண்டிருந்தார். வழக்கத்துக்கு மாறாக அனைத்து வழக்கு விசாரணைகளும் முடிவடைந்த பின்னர் இறுதியாகவே இந்த வழக்கு நீதிபதியின் தனிப்பட்ட அறையில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதன்போது நீதிமன்றத்தினுள் வைத்தே அந்த பெண் துப்பாக்கி முனையில் வன்புணரப்பட்டுள்ளார். அதிகாரத்தின் உச்சபட்ச மிலேச்சத்தனமான துஷ்பிரயோகமாக இதனைக் கொள்ள இயலும். இதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் கணவன் லெனின் ரத்நாயக்கவை கொல்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இன்றும் கூட கொல்லத்துடிக்கும் மனோநிலையில் ஆவேசம் மேலோங்கவுள்ளார் அந்தப் பெண்ணின் கணவன். குற்றவாளிக்கு உரிய தண்டனையை அரசு வழங்காவிட்டால் இந்த பாதிக்கப்பட்ட பெண்களின் கணவன்மார்களைப் போல ஆயுதமேந்தும்நிலை தோன்றுவது இயல்பானதுதானேஇந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்ற விக்டர் ஐவன் பின்வரும் தலைப்பின் கீழ்  இந்தச் சம்பவத்தையும் ராவய பத்திரிகையில் பிரசுரித்தார்.

"Magistrate Rapes Accused Woman in Courts Chamber"

இந்த சம்பவங்களின் பின்னர்நீதிபதியான லெனின் ரத்நாயக்க மீது ராவய பத்திரிகை குற்றஞ்சாட்டியமைக்காக 1999ம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி  அதி உயர் நீதிமன்றத்தில் மூன்று நபர்களைக்கொண்ட நீதிக்குழு ஒன்று விசாரணைக்காக நியமிக்கப்பட்டது. இதன் போது லெனின் ரத்நாயக்க மீது நான்கு குற்றங்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் அவரை உடனடி பணி நீக்கம் செய்வதற்குப் பதிலாக கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி வைத்தார்கள். மேலும் அவர்  இதன் போது அரை மாத சம்பளத்தை பெற்றுக்கொண்டு எந்தவித தண்டனையும் இன்றி இன்றும் சுற்றித்திரிந்து கொண்டிருக்கின்றார்.

இங்கே நீதி என்பது அதிகார பலம் தன்னகத்தே கொண்டவர்கள் தீர்மானிப்பதுதான்.” இந்த நாட்டிலுள்ள நீதி முறையில் பாரிய சிக்கல் நிலவிக்கொண்டிருப்பதனை இந்த சம்பவங்கள் மூலமாக அறியலாம். இதை பற்றி விக்டர் ஐவன் குறிப்பிடுகையில், "இந்த சம்பவங்களுக்காக எத்தனையோ ஆதாரங்களை சமர்ப்பித்தும்எத்தனையோ ஊடகங்களில் வெளிப்படையாக அம்பலப்படுத்தியும் கூட எந்த ஒரு நீதியும் கிடைக்கவில்லை. இப்படியிருக்க இந்த நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான சாதாரண  விளிம்பு நிலை மக்களின் வழக்கு நிலை எவ்வாறு  இருக்கும் என்பது கேள்விக்குரியதே" என்று கூறுகிறார்.

ஆவணப்படத்தின் இறுதியாக பின்வரும் விடயம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்:

"ராவய பத்திரிகையினால் நிரூபிக்கப்பட்ட குற்றத்தை மூடி மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பொது வழக்கறிஞர் ஷரத் நந்த சில்வா 1999ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க முன்னிலையில் தலைமை நீதிபதியாக (Chief Justice) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்."


மேலே கூறப்பட்ட வாசகத்தின் மூலம் நீதித்துறையின் சுதந்திரம் இறந்து போய்விட்டதனை நாம் உணரமுடியும். “Death to Freedom of Judiciary.”

இவ்வளவு மோசமான அநீதியை தைரியமாக வெளிக்கொண்டுவந்த இலங்கையின் திரைப்பட இயக்குனர் "பிரசன்ன விதானகே" பற்றிய சிறு அறிமுகமாவது இங்கே அவசியம். வழக்கமாக தமிழ்நாட்டு திரைப்படங்களை அப்படியே அச்சொட்டாக பின்பற்றும் கோமாளித்தனம் சிங்கள சினிமாப்போக்கில் விரவிக்காணப்படுகிறது. பிரசன்ன விதானகேசிங்கள சினிமாவுலகில் நம்பிகை தரும் ஒரு படைப்பாளி என்பதற்கு அவர் இதுவரை கொடுத்துள்ள திரைப்படைப்புக்களே சான்று. பொதுவாக இவரது திரைப்படங்கள் யதார்த்தமிக்க கலைத்துவமான படைப்பாக இருப்பவை. தேவையற்ற திணிப்புகள் அவற்றில்  காணப்படாது. குறிப்பாகதடை செய்யப்பட்ட அல்லது அதிக திரைப்பட விழாக்களில் பங்குபற்றியவையாக அவை காணப்படும். சைலன்ஸ் இன் த கோர்ட் ஆவணப்படத்துக்கு கூட இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முன்னாள் நீதியரசராக இருந்த லெனின் ரத்நாயக்க இந்த ஆவணப்படத்தைக் கண்டு நடுங்கி"இந்த ஆவணப்படம் வெளியானால் எனக்கு மட்டுமல்ல இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்புக்கே அபகீர்த்தி ஏற்படும்" என்று மனுவொன்றை தாக்கல்செய்திருந்தார். கொழும்பு மாவட்ட நீதிபதி எம்.ஏ.குணவர்தன இந்த ஆவணப்படம் பற்றி தீர்க்கமாக விசாரித்தபின்னர் இதன் மீதான தடை உத்தரவை நீக்கினார்.

"Death on a Full Moon Day" (1997)  என்ற பிரசன்ன விதானகேயினால் எழுதி இயக்கப்பட்ட திரைப்படம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க காலத்தில் இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்டு வெளிவரமுடியாது கிடப்பில் இருந்தது. எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அமைதியானஅழகான கிராமத்தில் தன்னுடைய தேவைகளோடு மட்டுமே வாழப்பழகிக் கொண்ட அந்த பூமியைக் கூட இந்த இனவாத யுத்தம் விட்டுவைக்கவில்லை என்பதை விமர்சன ரீதியாக இல்லாமல் வெறும் காட்சிகளினூடே காட்டிச் செல்கின்றது அவரது படம். இந்தப் படம் யார் பக்கம் என்று அனுமானிப்பதை விடஉண்மையின் பக்கம் என்பதே பொருத்தமாயிருக்கும்.




இந்தப் படம் சிறந்த இயக்குனருக்கான விருதுசிறந்த நடிகருக்கான விருது என்று பல விருதுகளைப் பெற்றுக்கொண்டது. 

அதே போன்று "With you Without You" என்னும் திரைப்படமும் பாரியளவில் பேசப்பட்ட ஒரு திரைப்படமே. பொதுவாக இவரது திரைப்படங்களில் வன்முறைகள் மற்றும் பாலின சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இன்னும் இங்கே குறிப்பிடாத அவரது பல சிறந்த திரைப்படங்களும் உண்டு.

ஆவணப்படத்தை நேர்த்தியாக கோர்த்து சுவாரசியமாக அதன் அழகியல் மற்றும் திரைமொழி  சிதையாமல்  பார்வையாளர்களுக்குப் புரியும் வண்ணம் கதை சொல்வதில் தான் ஆவணப்படத்தின்  வெற்றி தங்கியுள்ளது. ஐம்பத்து மூன்று நிமிடங்களைக் கொண்ட இந்த  ஆவணப்படத்தின் கதைகூறும் பாங்கானது சிங்கள மொழியில் அமைதியான பின்னணிக் குரலுடன் ஆரம்பித்து இறுதிவரை நகரும். தேவையான இடங்களில் பொருத்தமான இசையுடன்  சம்பவங்களை காட்சிப்படுத்தும் போது இன்னும் உயிரோட்டம் கொடுக்கப்பட்டிருக்கும்.


W.M 
கமலாவதியின் சம்பவத்தை ஒரு எளிமையான தோற்றமுடைய பெண்ணைக் கொண்டு நடிக்கவைத்திருப்பார் இயக்குனர். இரண்டு பிள்ளைகளை இழுத்துக்கொண்டு வேகமாக அலைந்து திரியும் அந்தப் பெண்ணின் பின்புறக்காட்சிகள் அவளது கையாலாகாத ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியிருக்கும். அதிகமான வன்புணர்வுபச்சாதாபத்தையோ அல்லது கண்ணீர் சிந்துவதையோ காட்சிப்படுத்தி பார்வையாளர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்திவிடாமல்அந்தப் பெண்ணின் குழப்பமான மனநிலை  முகபாவனையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.


அதே போல லெனின் ரத்நாயக்கவிற்கு பதிலாக வந்த நடிகர் கூட மிகவும் யதார்த்தமாக அந்த சிறு காட்சியில் பிரதிபலித்து இருப்பார். அதிக கதாபாத்திரங்களைத் தெரிவு செய்யாமல்அதற்குப் பதிலாக சித்திரங்களைக் காட்சிப்படுத்திபின்னணிக் குரல் கதையை இலகுவாகவும் சூசகமாகவும் மக்களிடம் கொண்டு சென்றிருப்பது இந்த ஆவணப்படத்தின் சிறப்பம்சம். உதாரணமாக உயர்நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக்குழு ஒவ்வொருவரையும் விசாரணை செய்யும் சம்பவத்தை எடுத்துக்கொண்டால்அந்தக் காட்சியில் நீதிபதி சித்திரமாக (Cartoon) காட்சிப்படுத்தப்பட்டிருப்பர். அந்த சித்திரத்திற்குப் பின்னால் அதிகாரத்தொனியில் கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கும்.

நீதித்துறை அதிகாரிக்கும் விக்டர் ஐவனுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலின்போது ஆங்கில உபதலைப்புகளையே திரையில் காட்சிப்படுத்தி இருப்பதனை காணமுடியும். பத்திரிகைகள் மற்றும் இன்ன பிற ஆதாரங்கள் அனைத்துமே தெளிவாக திரையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

சிங்கள சினிமாவுக்குள் பிரசன்ன விதானகே தனக்கே உரித்தான தனிப்பாணியில் தன் படைப்புகளை அழகியலுடன் நகர்த்திச் செல்பவர் என்பது அவரது திரைப்படங்களை பார்க்கும்  உலக சினிமா ரசிகர்களுக்கு இலகுவாக புரிந்திருக்கும். இவ்வாவணப்படமும் அவருக்குரிய தனித்தன்மையுடன் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதாக உள்ளது.

இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போதுபொது மக்களின் நீதிக்கான இறுதிக்கட்ட முயற்சியாக ஊடகத்துறையை அவர்கள் நாடியிருப்பதை அறியக்கூடியதாக இருகின்றது. மக்களுக்கான நீதி அரசிடமிருந்து கிடைக்காத போதும்அரசுக்கு எதிராகவே இருந்தாலும் கூட நடுநிலையாக சாதாரண மக்களுக்காக குரல்கொடுத்த விக்டர் ஐவனது துணிவு விபரிக்க முடியாத ஒன்று. நாளாந்த பத்திரிகைகள் அனைத்து சமூக மக்களிடமும் பரவலாக சென்றடைந்து நாட்டில் நிகழும் அரச அதிகாரங்களை எதிர்த்து கேள்விகளை எழுப்பி இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்றுமொழிவாதம்  இலங்கையைப் பொறுத்தவரையில் பெரிய சிக்கலாக  இருப்பதனாலோ என்னவோ இதனை தமிழ்ச்சமூக மக்கள் பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த சம்பவம் தொடர்பான  விக்டர் ஐவனது தொடர்ச்சியான பத்திரிகைச் செய்திகளையே தொகுத்து அதனை காட்சி மொழிப்படுத்தியிருக்கும் பிரசன்ன விதானகேயின் முன்னெடுப்பானது சிங்கள மொழி பேசும் மக்களிடம் மட்டுமன்றி ஏனைய பல்லின மக்களிடமும் இதனை வீரியமாகக் கொண்டு சேர்க்க உதவியுள்ளது.

இன்றைய நவீன யுகத்தில் வாசிப்பைக்காட்டிலும்  காட்சி ஊடகம்,படித்தவர் முதல் பாமரர்வரை அனைவரும் இலகுவில் புரிந்து உள்வாங்கிக் கொள்ளக்கூடியது என்னும்வகையில்   விக்டர் ஐவன் தனது பத்திரிகை பலத்தை பயன்படுத்தி குறித்த சம்பவத்தை இலங்கைச் சூழலை மையப்படுத்தி முடிந்தவரை அம்பலப்படுத்தி இருப்பார். ஆனால் பிரசன்ன விதானகே அந்த பத்திரிகைகளையே தொகுத்துவிக்டர் ஐவனையே அந்த ஆவணப்படத்தின் பிரதான  சாட்சியாக நிறுவிசம்பவங்களை காட்சிப்படுத்திஆங்கில உபதலைப்புகளுடன் கூடிய ஆவணப்படமாக உருவாக்கி உலகளாவிய ரீதியில் இலங்கை நீதித்துறையின் கையாலாகாத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி இருப்பார்.


இந்த ஆவணப்படத்தில் உள்ள சம்பவங்களைப் போன்று இன்னும் எத்தனையோ சம்பவங்கள் இலங்கையில் பல இடங்களில் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.  மென்மேலும் புறக்கணிக்கப்பட்ட சமூகத்திற்கு வெளிப்படாமலே மறைந்துள்ளன. இயக்குனர் பிரசன்ன விதானகே போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்காக துணிவுடன் குரல்கொடுக்கும்திரைப்பட  இயக்குனர்கள் இலங்கையைப் பொறுத்தவரை தமிழ்ச்சமூகத்தில்  இன்னும் உருவாகவேயில்லை என்பதே நிதர்சனம்.


- அத்தியா - புதிய சொல் : 'ஏப்பிரல் - ஜீன்இதழில் வெளியாகிய கட்டுரை

Share This:   FacebookTwitterGoogle+

Blog Archive

Followers

About Me

My photo
"வாழ்வெனும் கங்குலை புரிந்து கொள்ளத்துடிக்கும் மின்மினி இவள்"
Copyright © மின்மினி |