Saturday, February 11, 2017

" Fifty Shades Of Gery" ("சுயத்தை தொலைக்கும் கண்மூடித்தனமான பின்பற்றல்கள்")

"சுயத்தை தொலைக்கும் கண்மூடித்தனமான பின்பற்றல்கள்"




உலக நாடுகளிலே செக்ஸ் (sex) எனும் வார்த்தையை கூகுளில் தேடுவதில் இலங்கை தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் முதலிடத்தை பெற்றுக்கொண்டதாம்.இந்தியா ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொண்டதாம்.இதற்கிடையில் உள்ள நாடுகள் பற்றியும் புள்ளி விபரங்கள் பற்றியும் நீங்களே கூகுளில் தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்.செக்ஸ் என்னும் வார்த்தையை தேடிப்பார்ப்பவர்களுக்கு இந்த புள்ளி விபரங்களைத்தேடிப்பார்ப்பதும் ஒரு வித இன்பமாக இருக்கலாம்.இந்த புள்ளி விபரங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு நாடுகளையும் நாட்டு மக்களையும் தரக்குறைவாக மதிப்பிட்டு விட வேண்டாம் என்று நினைக்கின்றேன்.இது பாலுணர்வு பற்றிய அறிவுக்காகவும் தெளிவின்மைக்காகவும் கூட தேடி இருக்கலாம்.பாலியல் கற்கை நெறிகளை மேற்கொள்ளும் மாணவர்கள் கூட தேடி இருக்கலாம்.எந்த ஒரு நபரையும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யக்கூடாது,பாலியல் வன்முறையில் ஈடு பட கூடாது என்று நினைக்கும் நபர்கள் தாங்கள் சுய இன்பம் அடைந்து கொள்வதற்காக கூட தேடி இருக்கலாம்.வேலைப்பளு,மனஉளைச்சலில் உள்ளவர்கள் தங்கள் சிந்தனையை திசை திருப்ப இவ்வாறான விடயங்களை தேடிப்பார்த்திருக்கலாம்.பாலியல் உணர்வு நாட்டமற்றவர்கள் தங்கள் பாலியல் உணர்வுகளைத்தூண்டிக்கொண்டு தங்கள் துணையுடன் உடலுறவு கொள்வதற்காக தேடிப்பார்த்திருக்கலாம்.இங்கு நான் கூறிய காரணங்கள் அனைத்தும் என் கற்பனையில் விளைந்த ஒன்றல்ல என்பது உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

சரி.சிலருக்கு என்ன "இந்த பொண்ணு எப்ப பார்த்தாலும் பாலியல் சார்ந்த விடயங்களைப் பற்றியே உரையாட முன் வருகிறாள்?" என்று என் மீது கோபம் கூட எழலாம்.சிலருக்கு இந்த இடத்தில் எதற்காக இப்படி ஒரு விடயத்தை நான் முன்வைத்திருக்கிறேன்? என்ற கேள்விகளும் எழலாம். என்னிடம் உங்களுக்கான பதில்களை எதிர்பார்க்க வேண்டாம்.உங்களுக்கான கேள்விகளை நான் தயார் செய்து தருவேன்.முடிந்தால் விடைகளைத்தேடிக்கொள்ளுங்கள்.
நம் சமூகத்தில் காணும் ஒரு கவனிக்கப்படாத பிரச்சனையாக "பின்பற்றல்" என்னும் விடயத்தை நான் காண்கிறேன்.நீங்கள் கண்டிருப்பீர்களோ தெரியவில்லை.




18ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலப்பகுதி "ரொமாண்டிக் யுகம்" எனப்பட்டது.இக்கால கட்டத்தில்தான் "உணர்தல், கற்பனை,அனுபவம் ,ஏக்கம்" போன்ற விடயங்களை முன்னிறுத்தி இலக்கியங்கள் எழுந்தன.1774இல் ஜேர்மன் கவிஞர் "கதே"யின் 'இளம் வேர்தரின் துயரங்கள்' என்னும் நாவல் வெளியானது.இதன்போது இந்நாவலைப்படித்த பலர் தற்கொலை செய்து கொண்டனர்.காரணம் இந்நாவலில் வரும் கதாநாயகன் "வேர்தர்" காதல் தோல்வியின் காரணமாக தன்னைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறான்.காதல்,காதல்தோல்வி,கிடைக்காத காதலின் மீதான ஏக்கம்,என்று நீண்டு செல்லும் இந்நாவல் பலரைத்தற்கொலை செய்யத்தூண்டியதால் தடை செய்யப்பட்டதாம்.

இங்கு என்ன நிகழ்ந்துள்ளது? என்று சற்று சிந்தித்து பார்த்தால் உங்களுக்கே புரியும்.நிச்சயமாக "பின்பற்றல்" ஒன்று தான் நிகழ்ந்துள்ளது.அவன் காதலித்து தற்கொலை செய்து கொண்டால் நீயும் காதலித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா என்ன?? நாவலே இவ்வளவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றதென்றால் இன்றய காலகட்டத்தை சற்று சிந்து பார்த்தாலே போதும்.பின்பற்றல்கள் எவ்வளவு தூரம் மனிதனை ஆக்கிரமித்துச்செல்கின்றன என்பதை அறிந்து கொள்ள.
இன்றய சினிமாக்களையும் அவ்வாறே மக்கள் பின்பற்றும் நிலையே பாரிய அளவில் காணப்படுகிறது.இல்லை நாங்கள் சினிமாக்களை ஒரு பொழுது போக்கிற்காகத்தான் பார்க்கின்றோம் என்று சொல்பவர்கள் இருக்கட்டும்.இருந்தாலும் நிச்சயமாக அதிலும் மறைமுகமான பின்பற்றல்கள் உள்ளன.காதல்,ரொமான்டிக் சினிமாக்கள் மனிதனின் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறி விட்டது.இப்படித்தான் காதலிக்கணும் ,அதுதான் லவ்,இப்படித்தான் வாழனும்,இந்தமாதிரியான விடயங்களை அதிகமாகவே மனிதன் பின்பற்றக்கூடியவனாக இருக்கிறான்."காதல் ஒரு தடவை தான் வரும்,(F)பஸ்ட் லவ் ஜெஸ்ஸி;அவ்வளவு சீக்கிரம் போகாது"இந்த மாதிரியான வசனங்களைக்கூட தன்னகத்தே வைத்துக்கொண்டு காதல் என்ற வார்த்தைக்குள் அவதியுறும் ஆண்களும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இது போக இன்னும் பலவித பின்பற்றல்கள் உண்டு.அதை எல்லாம் விளக்கிக்கொண்டிருக்கத்தேவை இல்லை என்று நினைக்கிறேன்.




சரி.இப்போது ஒன்று கேட்கிறேன்.எத்தனை பேர் ஆபாச திரைப்படங்களைப் பார்த்துவிட்டு தனது மனைவியுடனோ கணவனுடனோ அதனைப்பின்பற்ற முயற்சிகள் மேற்கொள்கின்றனர்?(இன்று அதிகமான ஆண் பெண்களின் கைகளிலும் நவீன கையடக்க தோலை பேசி அல்லது மடிக்கணினி உண்டு) இந்தபின்பற்றல்கள் எவ்வாறான விபரீதங்களை தன்னிலை சார்ந்து உளவியல் உடலியல் ரீதியில் கொண்டு வருகின்றன?

எவ்வாறான தாக்கங்களை குடும்பத்திலும் சமுகத்தில் பிரதிபலிக்கின்றன?
கேள்விகளுக்கான விடைகளை சிந்தித்துக்கொண்டே இருங்கள்.

இன்னும் சில உங்கள் பார்வைக்கு தென்பட்டும் வெளிப்படுத்தப்படாத உண்மைகளை கூறிவிட்டுச்செல்கிறேன்.சொந்த வீட்டில் தந்தையால்,சகோதரனால் அல்லது நெருங்கிய உறவினரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளான சம்பவம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.எப்படி இவ்வாறான சிந்தனைகள் மனிதர்களின் மனங்களில் தோற்றுவிக்கப்படுகின்றன என்பது பற்றி நீங்கள் சிந்தித்துப்பார்த்ததுண்டா? நிச்சயமாக இதில் பெரும்பாலானவை ஆபாச திரைப்படங்களைப் பார்த்து இவற்றின் பின்பற்றல்களால் நிகழ்த்தப்படுவதே.ஆபாச திரைப்படங்களின் வகைப்படுத்தல்களில் 'தாய் மகனுடனான பாலுறவு,தந்தை மகளுடனான பாலுறவு ,சகோதரன் சகோதரியுடனான பாலுறவு'.. என்றவாறு நீண்டு கொண்டு செல்லும் என்பது உங்களுக்கும் தெரிந்த ஒன்றே. இந்த ஆபாச சினிமாக்களின் வகைப்படுத்தல்கள் நிச்சயமாக மனிதனின் உளவியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இதன் பிரதிபலனாகவே குழந்தைகள் மற்றும் சிறுவர்கள்,பெண்கள்,ஆண்கள் வன்புணர்வு சமூகத்தில் அதிகரித்து காணப்படுகிறது என்று நான் அடித்துக்கூறுவேன்.என்னடா இது.ஆண்கள் எங்கே வன்புணர்வுக்குட்படுத்தப்படுகின்றனர்? என்ற கேள்விகளை பெண்கள் இவ்விடத்தில் எழுப்பலாம்.ஆனால் நிச்சயமாக ஆண்கள் அப்படி ஒரு கேள்வியை எழுப்பமாடார்கள் என்று நினைக்கிறேன்.ஆண் சிறுவர்கள் அதிகமாக ஆண்களால் வன்புணர்வுக்கு ஆளாகின்றனர்.இது ஆண்கள் தங்கும் விடுதிகளில்,சிறைச்சாலைகளில்,இன்னும் பல இடங்களில் நிகழ்த்தப்படுகிறது.ஆனால் அது பரவலாக எங்கும் பேசப்படுவது இல்லை.அதற்காக எந்தப் பெண்ணும் சரி.ஆணும் சரி கோடி தூக்கிப் போராட முன்வருவதுமில்லை.அது ஒரு புறமிருக்கட்டும்.ஒரு சிலவயது வந்த பெண்களும் சிறு வயது ஆண்களை துஸ்பிரயோகம் செய்கின்றனர்.ஆனால் இந்த நிகழ்வுகள் கூட பெரிய அளவில் வெளிப்படுத்தப்படுவதில்லை.அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு ஆண் நிச்சயமாக கொண்டாட்டமாகத்தான் கருதுவான்.பெண்களைப்போல கண்களைக்கசக்கிக்கொண்டு நிற்கமாட்டான்.இது வேறு வகையான ஆண்களுக்கான சமூக கற்பிதம் என்றே நான் கூறுவேன்.


இப்போது சமூகத்தில் பெரும்பாலோரை ஈர்த்து அதிகமான வரவேற்பைப்பெற்றதுடன் மட்டுமல்லாது பல்வேறு பட்ட சமூக விமர்சனங்களையும் கண்டனங்களையும் பெற்றுக்கொண்ட 'ஒரு வன்மமானகாமத்துக்கும் மென்மையான காதலுக்கும் இடையிலான உறவுச்சிக்கல்களை வெளிப்படுத்தும் திரைப்படம்' பற்றி சில கேள்விகளையும் புரிதல்களையும் ஏற்படுத்திவிடலாமென நினைக்கிறேன்.

2015ஆம் ஆண்டு வெளியான "பிப்டி ஷேட்ஸ் ஒப் க்ரே"(Fifty Shades of Grey).இந்த திரைப்படம் அதிகமானவர்கள் பார்த்திருக்க கூடும்என நினைக்கிறேன்.இது 2011 இல் E.L.M James எனும் பெண் எழுதிய மிகப்பிரபலமாக பேசப்பட்ட நாவலைத்தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமே இது.

இந்த நாவலும் திரைப்படமும்( poronographic) ஆபாச வகைப்பிரித்தலுக்குள் உள்ளடங்கியது.ஆபாச திரைப்படங்கள் சமூகத்தில் எழுப்பும் எதிர்மறையான விளைவுகளை இந்த திரைப்படமும் ஏற்படுத்தாமல் இல்லை.

இத்திரைக்கதையானது,பிரதானமான 3 கதாபாத்திரங்களால் பின்னப்பட்டது.இதில் ஒரு கதாப்பாத்திரத்தின் முகம் காட்டப்படவே இல்லை. தன்வளர்ப்புத்தாயின் தோழி றொபின்சன் (Robinson) என்பவள் சிறுவன் க்ரிஸ்ட்டின் க்ரே (Christian grey )15 வயதாக இருக்கும்போது தன்னை உடலுறவு கொள்வதற்காக 'BDSM' என்னும் உறவு முறையை அறிமுகப்படுத்தி,6 வருடமாக அதன் மூலம் இந்த சிறுவன் துன்புற கிடப்பதும் அதை பார்த்து அந்த பெண் பாலியல் இன்பமுற்றதன் விளைவால் அந்த சிறுவனும் உளவியல் உடலியல் ரீதியாக "பிறரைத்துன்புறுத்தி அந்த வலியின் மூலம் பாலியல் இன்பம் அனுபவித்தல்" (Sexual Sadism Disorder) என்னும் உறவுக்கட்டமைப்பு நோய்க்குள் உள்ளாக்கப்படுகிறான் என்பது பற்றியும்,தற்போது செல்வச்செழிப்புடன் உள்ள 27 வயது நிரம்பிய அந்த ஆண் தன் வாழ்வில் சந்திக்கும் பெண்களை தான் அனுபவித்த 'BDSM'என்னும் உறவு நிலைகளில் 'Submissive and Dominant 'என்னும் உறவைத் தேர்வு செய்து பெண்களது பிற உணர்வுகளைபுறக்கணித்து உடல்களுடன் உறவு கொண்டாடி வருகிறான் இவன் . கன்னித்தன்மையுடைய எந்த ஆணின் வாசமும் தீண்டாத,பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டே ஆங்கில இலக்கியத்தில் பட்டப்பிடிப்பு மேற்கொள்ளும் ஒரு மென்மையான 21 வயதுடைய (Anastasia Steele) அனஸ்டீசியா ஸ்டீல் என்னும் பெண்ணின் காதலைப் புரிந்து கொள்ள முடியாமல் தான் பட்ட துன்பத்தை அந்த பெண்ணுக்கும் வழங்கி அதில் இன்பம் அனுபவிக்க முனைந்து கொண்டு அவள் பின்னால் ஓடிச்சென்று அவளது காதலைப் புரிந்து கொள்ளாமல் தோற்றும் விடுகிறான்.அந்த பெண்ணும் கூட தோற்றுத்தான் போய் விடுகிறாள்.அவனது காதலற்ற காம உறவு மற்றும் விதி முறைகளைக்கண்டு.


இத்திரைப்படம் பொதுவாக ஒட்டு மொத்தப்பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி காட்டாமல் நடிகை எவ்வாறு அந்த 'BDSM' என்னும் உறவு நிலைக்குக்குள் நுழைகிறாள்,மீண்டு வருகிறாள் என்பது பற்றியே பேசப்படுகிறதே தவிர சாதாரணமாகபொதுவான பெண்கள் எப்படி இதனுள் சிக்கிக்கொள்கிறாள் என்பது பற்றி பேசப்படவில்லை என்று நினைக்கிறேன்.

காதலின்றி காமம் சாத்தியமா? என்று ஒரு கேள்வியை முன்வைத்தால் தற்காலத்தைப்பொறுத்தவரை ஆம் என்றுதான் கூறவேண்டும் என்று நினைக்கிறேன்.இல்லையெனில் எதற்காக சமூகத்தில் அதிகமாக பாலியல் தொழில் புரியும் இடங்களும் பாலியல் தொழிலாளர்களும் பாலியல் வன்முறை நிகழ்வுகளும் அதிகரித்துச்செல்கின்றன?? இவை அனைத்தும் காதல் உணர்வுடன் நிகழ்த்தப்படுகின்றனவா? இல்லையே? இது போக இன்று காணப்படும் அதிகமான திருமண வாழக்கை நிகழ்வுகள்கூட காதலின்றிய காமத்துடனேயே பயணிக்கின்றது.


இத்திரைப்படத்தில் BDSM என்னும் உறவு நிலை பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது.இது பற்றிய மேலதிக தகவல்களை நீங்கள் கூட தேடிப்பார்க்கலாம். Submissive and Dominant என்ற உறவு நிலை பற்றியே இத்திரைப்படம் அதிகம் விவரிக்கப்பட்டுள்ளது.
இதை இவ்வாறு ஓரளவு தெளிவு படுத்தலாம் என்று நினைக்கின்றேன். ஒரு ஆணும் பெண்ணும் பாலியல் உறவுகொள்ளலில் எவ்வாறான உறவு நிலையை வழக்கமாக கடைபிடிப்பார்கள்? ஒன்று திருமண வாழ்வு,இரண்டு காதலித்து ஒன்றிணைந்து வாழ்தல்(Living together) இன்னும் பலஉறவு முறைகள் பெயர் வைக்காமல் வெளிப்படுத்தப்படாமல் கூட இருக்கலாம்.ஆனால் இந்த "BDSM" என்னும் உறவு நிலையை பின்பற்றும் 'சமூகமே' மேலைத்தேய நாடுகளில் உண்டு.Submissive என்பது ஒருவர் தன்னை அதிகாரத்தில் உள்ள ஒருவருக்காக அர்ப்பணித்து விடுவது.அடிமையாகி தன்னுடைய விருப்பு வெறுப்புக்களை மறைத்து தன் அதிகாரி என்ன கூறுகிறாரோ அதை மட்டுமே பின்பற்றுவது. Dominant என்பவர் அதிகாரத்தில் இருந்து கொண்டு கட்டளைகளைப் பிறப்பிப்பார்.இவருக்கு முற்றிலும் கட்டுப்பட்டு"Submissive" நடக்க வேண்டும்.இவ்வாறு கட்டுப்பாடுகள் மீறுமிடத்து (sub) மிகவும் வன்மையாக தண்டிக்கப்படுவார்.இவ்வாறான விதிமுறைகளுடன் கூடிய உடன்படிக்கையை பற்றியும் இத்திரைப்படம் அதிகம் பேசுகின்றது.


இந்த உறவு முறையாவது உடன்படிக்கையின் அடிப்படையில் நிகழ்கிறது.ஆனால் திருமணம் என்ற உடன்படிக்கையில் விழுந்த ஒரே குற்றத்திற்காக நம் சமூகத்தில் உள்ளபெரும்பாலான பெண்கள் பாலியல் பற்றி எவ்வித பிரக்ஞையும் இல்லாமல் தங்களை அர்ப்பணிக்கின்ற நிலை மிகவும் கொடூரமானதாகவே நான் கருதுகிறேன்.அதிகமான விவாகரத்துப்பதிவுகள் கூட கணவன் உடலுறவின்போது மிகவும் வன்மையாக மிருகம் போல் நடந்து கொள்வதாகவும்,அல்லது ஆபாச திரைப்படங்களில் மேற்கொள்வது போல பாலுறவு கொள்ள முற்படுவதாகவும் பதிவாகி உள்ளன.இந்த விவாகரத்து என்னும் போதுதான் மற்றுமொரு விடயமும் நியாபகத்துக்கு வந்தது.ஆபாச திரைப்படங்களைப்பார்க்கும் பெண்கள் கூட அதில் வரும் ஆண்களின் உடலியல் நிலை பற்றிய ஒரு தவறானபுரிதலை மேற்கொண்டுவிடுகின்றனர்.அதனால் கணவன் தனக்குரிய உடலியல் சுகத்தை முழுமையாக தரவில்லை என்ற காரணத்தை மையப்படுத்திய விவாகரத்துகளும் மேற்கொள்ளப்படுகின்றன.இதுவும் காதலற்ற வெறுமனே சதைகளின் மீது நிகழும் உடலியல் இச்சையாகவே காணப்படுகிறது.


இந்த திரைப்படம் முற்று முழுதாக பெண்களுக்கு எதிரான ஒரு படமாக பாலவாறு விமர்சித்துப்பேசப்பட்டது.தன் இச்சை கொள்ளும் பெண்ணுடலை அடிமைப்படுத்துவது,அதிகாரம் செலுத்துவது,என்றெல்லாம் பேசியது.ஒரு விதத்தில் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் வேறொரு வடிவில் கேள்வி ஒன்றயும் மறைமுகமாக ஏற்படுத்தி விடுகிறது.இதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை.Christian grey தனது கடந்தகால வாழ்வுபற்றி Anastasia Steele இடம் உரையாடும் போது தன்னை தன் தாயின் தோழி அவளது அதிகாரத்தின் கீழ் தன்னை 6 வருடமாக பாலியல் உறவுகொண்டு புணர்ந்து வருவதாக கூறுகிறான்.அப்போ இந்த இடத்தில் வன்புணர்வு ஒன்றும் நிகழ்த்தப்படவில்லை.அவன் 15 வயதில் இருந்து 21 வயது வரை அவளது கட்டுப்பாட்டின் கீழ் BDSM உடன்படிக்கையுடன் வாழ்ந்து வந்திருக்கிறான் என்றுதானே அர்த்தம்.அவனது பாலியல் அதிகாரியாக இருந்த அவனது வளர்ப்புத்தாயின் தோழியின் கீழ் பல்வேறு பட்ட துன்பங்களை அனுபவித்தும் இருக்கிறான்.இது திரைப்படத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுவதைக்காணலாம்.Christian grey யின் உடலின் மார்பகங்களில் தீக்காயங்கள் பட்டிருப்பதை Anastasia Steele தொட முற்பட்டு இவை எவ்வாறு ஏற்பட்டன? என்று வினவுவாள்.அந்த சந்தர்ப்பத்தில் அவனிடம் பதில்கள் கிடையாது.ஏன் எனில் அவை அனைத்தும் அவனுக்கு அவனுடைய அந்த பெண் அதிகாரி (dominant)இனால் கொடுக்கப்பட்ட தண்டனைகள்.மேலும் அவன் ஒருசந்தர்ப்பத்தில் தான் 50 வழிமுறைகளில் பாலியல் ரீதியாக மோசமான முறையில் புணரப்பட்டதாக கூறுகிறான்.இருந்தாலும் தற்போதும் கூட அந்த பெண் அதிகாரி Robinson உடன் பழக்கத்தில் உள்ளதாககூட கூறுகிறான்.அது பாரிய எரிச்சலையம் கோபத்தையுமே பார்வையாளர்களுக்கும் அவனைக் காதலித்துக்கொண்டிருக்கும் Anastasia Steeleக்கும் ஏற்படுத்தி விடுகிறது.ஏன் அவன் இதனைக் கொடுமையாக நினைத்திருந்தால் அப்போதே அந்தப்பெண்ணை விட்டு நீங்கி அவளது உறவை முறித்துக்கொண்டிருக்கலாமே? என்ற கேள்வி எழலாம்.இங்கு தான் (Dominant) அதிகாரியாக இருப்பவர்களின் உளவியலைப்புரிந்து கொள்ள வேண்டும்.அதிகாரி எப்போதும் தன் கீழ் இருப்பவரின் உளவியலைபுரிந்து கொண்டு,ஆதரித்து அன்பு காட்டி ,தன்னை நீங்காதவாறு தன் கீழ் உள்ளவரின் தேவையைப் பூர்த்தி செய்து வைத்துக்கொண்டிருப்பார்.இது அவர்களது 'BDSM' கொள்கைகளில் ஒன்று.அத்துடன் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டிருக்கும்.இந்த உளவியலின் அடிப்படையிலேயே Christian grey தன் கீழ்ப்படிவில் வைத்திருக்க Anastasia Steele ஐ நெருங்கிச்செல்கிறான். அவளுக்கு இலக்கியம் மிகவும் பிடிக்கும் என்பது தெரிந்து,அவளுக்காக ஒரு ஆங்கில இலக்கிய முதல் பிரதி ஒன்றை பரிசளிக்கிறான்.இது போக அவளுக்கு வெளிப்படையாக மகிழ்ச்சியூட்டும் விடயங்கள் சிலவற்றை கொடுக்கிறான்.கார்,மடிக்கணினி,வானூர்தி பிரயாணம் ஆடம்பரமான படுக்கையறை இவ்வாறு நீண்டு கொண்டே செல்கின்றது அவனது பரிசுகளும் அவள்மீதான உடலியல் இச்சையும்.


படத்தின் கதாநாயகி அவனை விட்டு விலகிச்சென்றுவிட முடியாத காரணம் அவன் மீது அவளுக்கு தனிப்படட முறையில் இருந்த ஈர்ப்பும்,அவனுக்கு சமூகத்தில் உள்ள அந்தஸ்த்து மற்றும் அவளைச்சூழ உள்ள உறவினர்கள்,நண்பர்களின் அவன் மீதான நல்லபிப்பிராயங்களுமே அவளை அவன் மீது காதல் கொள்ளச்செய்து விடுகின்றது.அவனுடைய நோக்கங்கள் தெளிவாக தெரிந்திருந்தும் கூட அவனுக்காக அவள் தன்னை மறந்து அவன் மீது கொண்ட காதலினால் அவளை அர்ப்பணிக்கிறாள்.இறுதியில் கூட 'ஏன் இப்படி நீ இருக்கிறாய்? சாதாரண மனிதர்களைப்போல் நாமும் வாழக்கூடாதா?? 'என்று அவனிடம் கேட்டதற்கு நான் இதுதான்.என்னுடைய வழி இதுதான்.நான் 50 வழிமுறைகளில் பாலியல்ரீதியாக புணரப்பட்டு துன்பம் அனுபவித்தேன்என்று கூறுகிறான்.இதை கேட்டவள் அதிர்ச்சியுற்று 'என்னிடம் உனக்கு என்ன வேண்டும்? நீ அனுபவித்த துன்பங்களை எனக்கும் கொடு.அந்த ஒரு வழியில் மட்டும்தான் என்னால் உன்னைப் புரிந்து கொள்ள முடியும் என்று கூறி அவன் வழங்கும் தண்டனைகளைப்பெற்றுக்கொண்டு அவனைப்புரிந்து கொண்டு பிரிந்து சென்று விடுகிறாள்.எதைப்புரிந்து கொண்டாள் என்று தெரியுமா? அதுதான் (Sexual Sadism Disorder)பிறரை வருத்தி துன்புறுத்தி அந்த வலியின் மூலம் பாலியல் இன்பம் அனுபவிக்கும் நோய்.இந்த நோய் இன்று நம் சமூகத்திலும் காணப்படுகிறது அதுவும் எவ்வித கொள்கைகள் உடன்படிக்கைகள் ஏதும் இன்றி.


இத்திரைப்படத்தில் உடலுறவு கொள்வதற்காகவே விளையாட்டுஅறை (play room) ஒன்று தயாரித்து காட்ச்சிப்படுத்தப்பட்டுள்ளது.இதில் பல்வேறு வகையான பாலியல் உபாகரணங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.BDSM என்னும் இவ்வுறவு முறையில் ஏற்படும் உடலியல் காயங்கள் கூட ஒரு வித இன்பமாக கொள்ளப்பட்டதுடன் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தவருடமும் இந்த பாலியல் உபகாரணப்பாவனைகள் அதிகரித்து காணப்பட்டுள்ளன.இதில் இருந்து புலப்படுவது என்ன? அவரவர் தங்கள் சுயங்களைத் தொலைப்பதனை தாங்களே மறந்த்துவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.தாங்கள் ஏதொரு சினிமாவின் பின்பற்றலாகவும் ஒரு நாவல் இலக்கியத்தின் பின்பற்றலாகவுமே தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.சினிமாவை அல்லது ஒரு இலக்கியநாவலை இங்கு யாருமே புரிதலுடன் அணுகுவதில்லை. பின்பற்றலுடனேயே அணுக முற்படுகின்றனர்.இதை விட ஒரு அறியாமை எங்கே இருக்கக்கூடும்? பார்க்கின்ற சினிமா மற்றும் இலக்கியங்களை எதற்கு அதில் உள்ளவாறே பின்பற்ற வேண்டும் என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் எழுந்தாலே போதும்.அந்த இடத்திலிருந்து "புரிந்து கொள்ளல் மூலம் அணுகுதல்"என்னும் செயற்பாடு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழ ஆரம்பித்து விடும்.

இந்த திரைப்படத்தில் உள்ள "Love Me Like Do"என்னும் பாடல் நான் உட்பட இன்று பெரும்பாலானோரை கவர்ந்த பாடல்களில் ஒன்றாக உள்ளது.இத்திரைப்படத்தின் பாகம் 2 fifty shades darker என்னும் பெயரில் 2017 பெப்ரவரி 2ஆம் திகதி வெளியிடப்பட்டதாககூறப்பட்டது.நான் இன்னும் பார்க்கவில்லை.

- அத்தியா -
Share This:   FacebookTwitterGoogle+

Saturday, January 28, 2017

" Malena" ( சமூகத்தை ஆக்கிரமிக்கும் கிசுகிசு)

"சமூகத்தை ஆக்கிரமிக்கும் கிசு கிசு"

நான் அறிந்து சொந்த நாட்டில் சொந்த ஊரில் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் ஆண்கள் உரிய வயதில் திருமணம் முடிக்கும் நிகழ்வை கிட்டத்தட்ட தற்கொலைக்குச்சமமானதாக பார்க்கிறேன்.அது எவ்வகையானது என்பது பற்றி விளக்கிக்கொண்டிருக்க முடியாது.இது ஒரு வகை சமூகத்திணிப்பாகவும் பின்பற்றலாகவுமே உள்ளது.அதிகம் படித்த பெண் எனக்கு திருமணத்திற்கு வேண்டாம் என்ற நிலை மாறி பட்டப்படிப்பு மேற்கொண்ட பெண்தான் எனக்கு மனைவியாக வர வேண்டும்;ஆனால் வேலைக்குச்செல்லக்கூடாது என்ற ஒப்பந்த அடிப்படையிலான திருமணங்களும் மேற்கொள்ளப்படுகிறது.இதனை ஆணாதிக்கம் என்ற போர்வை தாங்கிப்பார்ப்பதை விட சமூகத்திணிப்பால் ஆண்களே தங்கள் மீது சுமைகளை வாரிகட்டிக்கொண்ட ஒன்றாக நோக்குகிறேன்.ஒரு புறம் ஆண்கள் மீது பரிதாபமும் கொள்கிறேன்.இது இவ்வாறிருக்க திருமணமான பின் கணவன் வெளி நாடு செல்வது பற்றி எவ்வித அபிப்பிராயாயமும் எனக்கில்லை.ஆளுக்கொரு காரணத்தை சொல்ல வரிந்து கட்டிக்கொண்டு வந்து நிற்க வேண்டாம்.குறித்த மத கலாச்சாரங்களினால் பின்னப்பட்ட சமூகத்தில் வாழும் சுதந்திரமாக வேலைக்குச்செல்லும் பெண்ணோ அல்லது வீட்டில் குழந்தை குட்டிகளைப்பார்த்துக்கொள்ளும் பெண்ணோ கணவன் தன் கண் படாதூரத்தில் உள்ள நிலையில் சமூகத்தில் எத்தகைய பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்பதையும் சமூகமே தீர்மானித்தும் விடுகிறது. இதில் விவாகரத்தான பெண்,விதவை பெண்களின் வாழ்வியல் பற்றி விளக்கம் தர வேண்டுமா என்ன??

இதில் என்ன புதிர் என்றால்,பெண்ணைப்பற்றி தான்தோன்றித்தனமாக கற்பனை செய்வதும் சமூகமே.அந்தக்கற்பனைக்கேற்ப கிசுகிசுக்களைப்புனைவதும் சமூகமே.அந்த கிசுகிசுக்களை உண்மைப்படுத்தப் போராடுவதும் சமூகமே.அந்த கிசுகிசு நிரூபிக்கப்பட்டு உண்மைப்படுத்தப்பட்டதை அறிந்தால் அந்த சமூகத்தின் குரலிலும் மனதிலும் எழும் கம்பீரம், உற்சாகம் அவரவர் வாழ்வில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் காணமுடியாது.



நான் பார்த்த சமூகம் ,காலகட்டமும் வேறு,நான் பார்த்த பெண்ணும் வேறு."மலேனா"(Malena).அழகிதான் அவள்.அவளது அழகிற்காகவே அந்தப்படத்தைப்பார்த்தேன்.அந்த அழகை முழுமையாக பார்த்ததில் இருந்து பொறாமை ஒன்றும் எனக்கு தோன்றவில்லை.பயமும் பரிதாபமும் மேலோங்கியது.இது 2000 ஆம் ஆண்டு வெளியான ஒரு இத்தாலிய திரைப்படம்.இது சமூகப்பார்வையில் 'மேலோட்ட செக்ஸ்'திரைப்படமாகவே கணிக்கப்பட்டது.இத்திரைப்படம் 1940 ஆண்டு காலப்பகுதியில் பாசிச கொள்கையுடைய முசோலினியும்,ஹிட்லரும் இணைந்து யுத்தத்தை மேற்கொண்ட காலகட்டத்தில் கணவன் யுத்தத்திற்குச்சென்றதால் 27 வயது நிரம்பிய கவர்ச்சியான உடல் கட்டமைப்பைக்கொண்ட ஒரு ஆசிரியையின் வாழ்க்கை கிசுகிசுக்களினால் எவ்வாறு சிதைவுறுகின்றது என்பதைப் பிரதிபலிப்பதே இத்திரைப்படம்.

கிசுகிசுக்கள் எவ்வளவு வேகமாக மனிதனது மனதை ஆட்க்கொண்டு விடுகின்றன?அதிலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளவர்களது கிசுகிசு என்றாலே பார்வையாளர்களது நாவுக்கு கொண்டாட்டம் தான். இங்கே கிசுகிசுக்கள் மட்டுமல்ல ஒரு நிலை தாண்டி மலேனாவின் அழகு,பசி,வறுமை,சுற்றி உள்ள ஆண்களின் காம வெறி என்பன அவளை வேறொரு அசாதாரணமான நிலைக்குத்தள்ளி விட்டு வேடிக்கை பார்கின்றது.இப்படியான ஒரு நிகழ்வு தற்காலத்திலும் சாதாரணமாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.அந்த ஊர் பெண்களிடம் மலேனாவின் அழகின் மீது மேலோங்கிய ஒரு வித பொறாமையும் கோபமும் கூட காணப்பட்டது."ஒரு பெண்ணின் மனது பெண்ணுக்குத்தான் புரியும்" என்னும் பழமொழி இத்திரைப்படத்தில் பொய்யாகவே போய் விட்டது. ஒட்டு மொத்த பெண்களும் சேர்ந்து அடித்து துன்புறுத்தியும் அங்குள்ள ஆண்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.

ஆண் சமூகத்தைப்பார்த்து ரத்தக்காயங்களுடன் மலேனாவின் கதறல் கண்ணீர் ஆதங்கம் அங்குள்ள எந்த ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி புரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை அந்த சிறுவனைத்தவிர. எந்த பெண்ணுக்கும் தன் வீட்டில் இருக்கும் ஆணை கட்டுப்பாடாக வைத்திருக்க முடியவில்லை.கணவனாக இருந்தாலும் சரி,பிள்ளையாக இருந்தாலும் சரி.பழி எல்லாமே மலேனா(பெண்) மீதுதான்.


இத்திரைப்படத்தின் கதையை நகர்த்திச்செல்லும் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்று உண்டு.
ரெனாடோ( Renato ).இவன்தான் இத்திரைப்படத்தின் கதை சொல்லி.முன்கட்டிளமைப்பருவத்தில் பல்வேறு உடலியல் உளவியல் மாற்றங்களை தன்னகத்தே கொண்டு அதற்கு தீர்வு காண முடியாமல் தவிக்கும் 12 வயது சிறுவன். இவனது கனவுக்கன்னி மலேனா.அவனது சுய இன்பத்திற்கு அவளது முகமும் உடலும் கற்பனையில் அவனுக்குச்சொந்தமானவை.இதையும் தாண்டி அவனுக்கு அவள் மீதான காதல் வார்த்தையால் விபரிக்க முடியாதவை.அவளை வற்புறுத்தி அடைந்து கொள்ள வேண்டும்,அனுபவிக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் இன்றி அவனைச்சுற்றி உள்ளவர்கள் கூறும் கிசுகிசுக்களைப்பற்றிய உண்மை நிலையை அறிந்து கொள்ள அவளைப்பின் தொடர்கிறான்.சுற்றி உள்ள அவனது சமூகத்தையும் மலேனாவின் துன்பத்தையும் அவளது அசாதாரண மாற்றத்தையும் 12 வயதிலே புரிந்து கொள்கிறான்.

சிறுவனின் பழிவாங்குதல் என்னும் செயற்பாடானது(தேநீரீல் எச்சில் துப்பி கொடுத்தல்,அவதூறு பேசும் பெண்களின் கைப்பையில் சிறுநீர் கழித்தல்) சிரிப்பை மூட்டினாலும் மலேனாமீது கொண்ட அன்பையும் சமூகத்தவரின் மீது கொண்ட வெறுப்பையும் இலகுவாகவே வெளிப்படுத்தி நிற்கின்றது.

ஆண்கள் வயதுக்கு வருதல்,மற்றும் பிற செயற்பாடுகள் அனைத்தும் ஆண் உடல் மொழியிலேயே சொல்லப்பட்டுள்ளது.சில இடங்களில் ஆண்களுக்கு சிரிப்புக்கூட வந்திருக்கலாம்;ஆனால் வெட்கப்பட வாய்ப்பே இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.

சிறுவனின் தந்தையின் செயற்பாடு சில சமயம் கோபமூட்டினாலும் மகனைப்பற்றிய உடலியல் ரீதியான,உளவியல் ரீதியான புரிந்துணர்வு ஒவ்வொரு தந்தைக்குள்ளும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று கூற தோன்றியது.பாலியல் தொழில் புரியும் பெண்களிடம் மகனை தந்தை ஒப்படைத்து 'இந்த சிறுவனை வாலிபனாக்கி கொடுங்கள்' என்பதில் உடலியல் தேவை அந்தந்த வயதில் தீர்க்காவிட்டால் எப்படிப்பட்ட சிக்கல்களை உடலும் உள்ளமும் சந்தித்திருக்கும் என்றே சிந்திக்க தோன்றுகின்றது.ஒரு புறம் இச்செயற்பாடு பாலியல் தொழிலை ஆதரிப்பது போல தோன்றினாலும் காலங்காலமாக ஏன் பாலியல் தொழில் முற்றாக தடை செய்யப்படவில்லை? இன்னும் பல நாடுகளில் அரசாங்க அனுமதியுடனேயே ஏன் நடாத்தப்படுகின்றன?போன்ற கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளதால் பாலியல் தொழில் பற்றி விவாதிக்கத்தோன்றவில்லை.

வழக்கமான என் கேள்வி ஒன்றையும் முன்வைத்து விடுகிறேன்.இதே இடத்தில் ஒரு பெண் பருவ வயதை அடைந்து உடலியல் உளவியல் ரீதியாக சிக்கல் கொண்டால் இதை ஒரு தாய் அல்லது தந்தை எவ்வாறு முகம் கொடுத்து இருப்பார்களோ ? திருமணம் ஒன்றே இதற்கான தீர்வாக இருந்திருக்கும்.பதிலில் கூட எந்த மாற்றமும் இல்லை.


தமிழ் சினிமாவில் வருவது போல அந்த அழகிக்கான ஏதும் தனிப்பட்ட கவர்ச்சிக்காட்சிகள் இருக்குமா என்று சிலர் ஏங்கி தவித்து இருக்கலாம்.இல்லவே இல்லை.சமூகப்பார்வையில் இருந்து விலக்கி சிறுவனது கண்வழியே மட்டுமே பார்வையாளர்களுக்கு மலேனாவின் வாழ்வியலைப் புரிய வைத்துப் பார்க்கச்செய்து இருக்கிறார் இயக்குநர்(Giuseppe Tomatore).இப்படி ஒரு பார்வை வழி நம் சமூகத்திற்கு இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியதே! அது தனிமையில் வாழும் பெண்ணாக இருந்தாலும் சரி,கணவனை இழந்த அல்லது கைவிட்ட பெண்ணாக இருந்தாலும் சரி.இந்த திரைப்படத்தைக்கூட புரிந்து கொள்ள முடியாதவர்களா இந்த சமூகத்தையும்
பெண்ணையும் புரிந்து கொள்ளப்போகிறார்கள்??.

திரைப்படம்- Malena,(2000),Italy
இயக்குனர்-Giuseppe Tomatore

- அத்தியா -

Share This:   FacebookTwitterGoogle+

Tuesday, January 17, 2017

Memories Of A Machine (மனிதனின் பாலியல் நடத்தைச்சிக்கல்கள்)

"மனிதனுடைய பாலியல் நடத்தை இவ்வளவு
சிக்கலானதா ?"

சுய இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கும் வயது வந்த ஒரு பெண் அவளது பெற்றோர் பார்வைக்கு வந்தால் உடனடியாக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையாக எது இருக்கும்? திருமணம்??

இதுவே ஒரு ஆண் சுயஇன்பம் அனுபவிப்பதனை பெற்றோர் பார்வையில் மட்டுமல்ல சமூகப்பார்வையில் கூட தவறாக தெரியாது இல்லையா?

சம வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் முதன் முதலில் காதல் வயப்பட்ட நிலையில் நேரில் சந்தித்து உடலியல் ரீதியாக ஸ்பரிசித்துக்கொள்கையில் அந்த பெண் தன் பாலியல் விருப்பங்களை வெளிப்பட கூறுகையில் அந்த ஆணிடம் இருந்து வெளிப்படும் வெறுப்பு நிலை,அந்தப்பெண்ணை காமவெறி கொண்ட அருவெறுப்பானவளாக நினைத்து அவளை அவமானப்படுத்திவிட வைக்கிறது,இதனையே அந்த ஆண்தன்பாலியல் விருப்பங்களை வெளிப்படுத்தினால் ஒரு சாதாரணமான ஒரு விடயம் இல்லையா?

பாலியல் கல்வி பாடசாலைகளில் கட்டாயமான ஒரு பாடமாக நிறுவாமல் பின்வாங்க காரணம் என்னவாக இருக்கும்?

மேலே உள்ள கேள்விகள் தோன்ற காரணமாக ஒன்பது நிமிடத்தை கொண்ட,ஒரேயொரு கதாபாத்திரம் நடித்திருக்கும் ஒரே ஒரு ஷாட்டில் எடுக்கப்பட் ட ஒரு குறுந்திரைப்படம் காரணம் என்றால் நம்ப முடியுமா? யூடியூப் வலைத்தளத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகவும் பல்வேறு சர்ச்சைகளையும்,பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ள ஒரு குறுந்திரைப்படம் "Memories of a Machine". இந்த திரைப்படத்தின் முன் பின்னால் காண்பிக்கப்படும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் பெயர்களை நீக்கிவிட்டு இதனை வெறுமனே காணொளி போல பார்க்க நேருமாயின் நான்கூட பின்வருமாறு கூறியிருப்பேன் என்று நினைக்கிறேன்."இது கணவன் மனைவி இருவருக்கிடையில் நிகழும் அந்தரங்க உரையாடலை கணவன் கேமராவில் பதிவு செய்து மனைவிக்குத்தெரியாமல் வேண்டும் என்றே பதிவிட்டான் ."அந்த அளவுக்கு யதார்த்தமான நடிப்பை கொண்டுவந்துள்ளார் இயக்குநர் Shailaja Padindala.இயக்குனரை மிகச்சரியாகப்புரிந்து கொண்டவர் மலையாள நடிகை KaniKusrutiயை கூறலாம்.மொத்தப்படமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதால் அந்த நடிகை கதை சொல்லும்போது point of view இல் நாமே கதையை கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றது.இது கேமரா மேன் Sandeep.PS இன் திறன் என்றே கூறலாம்.


இக்குறுந்திரைப்படமானது,திருமணமான ஒரு பெண் தன் கணவனிடம் ' எவ்வாறு தான் முதல் முதலில் பாலியல் இன்பத்தை அனுபவித்தார் அல்லது பாலியலைப் புரிந்து கொண்டார் ? என்பது குறித்த கதையே இது.இத்திரைப்படத்தில் கதாநாயகி தான் 8 வயதாக இருக்கும் போது,தன்னை வயது வந்த வேலையாள் தொட்டது பற்றி எவ்வித பதட்டமும் இன்றி சாதாரணமாக பேசுகிறார்.இந்த சம்பவம் பாலியல் வன்முறையை ஊக்குவிப்பதாகவும் சிறுவர்மீதான பாலியல் இச்சை கொண்டவர்கள் மீது கடினமற்றதன்மையை உருவாக்கி இருப்பதாகவும் பல்வேறு பக்கங்களில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.இதைப்பற்றி இயக்குநரிடம் வினவயில் அவர்கூறும் பதில் நானும் ஒரு பெண் என்ற வகையில் பெண்கள் ,சிறுவர்பாலியல் வன்முறைக்கு நானும் எதிரியே.மேலும் அது தொடர்பான எந்தவிதமான கற்பனைகளையும் உருவாக்கும் உத்தேசமும் இல்லை."ஒரு சிறுமி பாலியல் தொடர்பான சமூக விதிமுறை மற்றும் கலாச்சார விழுமியங்களை குடும்பத்திலிருந்து அறிந்து அதனை எதிர்கொள்ள முன்னர்,அந்தச்சிறுமியின் உணர்வு எவ்வாறு இருக்கும்? என்பதை சித்தரிக்கும் முயற்சியே" இத்திரைப்படம்.

நான் இவ்விடத்தில் ஒரு வினாவை முன்வைக்கிறேன்,நீங்கள் பார்க்கும் திரைப்படங்களை பின்பற்றவேண்டும் என்ற கோட்ப்பாடு எங்காவது உங்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளதா? திரைப்படங்களை புரிந்து கொள்ள தெரியாதவர்கள் யாருக்கு சாதகம் பாதகம் பார்த்து விமர்சிக்கின்றனர் என்றுதான் எனக்கு புரியவில்லை.என்னைப்பொறுத்தவரையில் இங்கே இயக்குநர்Shailaja Padindala என்ன விடயத்தை சொல்ல நினைத்தாரோ அதை மட்டுமே தெளிவுற கூறி இருக்கிறார்.மேலும்,"ஒரு பண்பட்ட சமூகத்தில் எதனைப் பேச வேண்டும்?,எதனைப்பற்றி உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்? என்று காலங்காலமாக சமூகத்தில் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளதோ அதற்கு சற்று புறம்பாக சில கேள்விகளை மறைமுகமாக எழுப்பி ஒரு சிறிய புரட்சியை உருவாக்கி சிந்திக்க வைத்துள்ளார்.

இன்றய உலகில் மனிதர்கள் உண்மையாகவும் யதார்த்தமாகவும் இருப்பது மிகவும் அரிதாகவே உள்ளது.சில விடயங்கள் பற்றி சிலருக்கு தெளிவு இருக்கும் போது அதனுடைய தாக்கத்தை சகித்துக்கொள்வது சமூகத்திற்கு கடினமானதாகவே உள்ளது.ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி இலகுவாக வெளிப்படுத்த முயற்சிக்கும் இந்த படத்தை சுற்றி ஏன் பெருவாரியான பதற்ற நிலை காணப்படுகிறது??

இந்த இடத்தில் சமூகத்தவர்களின்,பார்வையாளர்களின் சிக்கல் என்னவென்றால்,அந்தப்பெண் பாதிக்கப்பட்ட அல்லது வன்முறைக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண் பேசுவது போல வெறுப்படைந்து,அழுதுகொண்டு,ஆவேசம் கொண்டு பேசவில்லை.மாறாக சுய இன்பம் காணுதல் பற்றி ஒளிவு மறைவின்றி நகைச்சுவையாக பேசுகிறாள்.இங்கு சமூக மக்கள் ஏன் கிளர்ச்சிக்குள்ளாகி கோபம் கொள்கின்றனர் என்றால்,வெவ்வேறு நபர்களுடன்,விடயங்களுடன்,தங்களது நடைமுறை வாழ்வுடன் இணைத்துப்பார்த்து கூச்சமும் அருவருப்பும் கொள்கின்றனர்.இங்கு மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் இது சரி பிழை என்ற விவாதத்திற்குரிய விடயம் அல்ல.இது வெளிப்படையாக கூறப்பட்டுள்ள உண்மையின் நிழல்களாகவே உள்ளது.மேலும் இது (pedophile) குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீதான இச்சையை நியாயப்படுத்தும் ஒரு படமும் அல்ல. என்னை பொறுத்தமட்டில் "இது மனிதனுடைய பாலியல் நடத்தை எவ்வளவு சிக்கலானது என்பது பற்றி புரிந்து கொள்வதாகும்"

மனிதர்கள் வித்தியாசமானவர்கள்.ஒவ்வொருவரது அனுபவமும் அதனை அவர்கள் கூறுகின்ற விதமும் யாரையும் தாழ்த்தி விடாது.பிறரின் பார்வையில் நாம் யாரென்பதில் எந்த நிஜமும் இல்லை.அப்படி இருப்பதற்காக சுய விருப்பங்களை மறைத்து போலியான வேஷங்களைப் போட்டுக்கொண்டு நாம் சாதித்து விட போவது ஒன்றும் இல்லை.

இன்னும் ஒரு முறை இயக்குநர் Shailaja Padindala வின் தெளிவினையும் தைரியத்தையும் மலையாள நடிகை Kani Kusruti யின் இயலப்பான யதார்த்தமான நடிப்பையும் கேமரா மேன் Sandeep.PS ஐயும் பாராட்டிடாமல் இருக்க முடியவில்லை.


- அத்தியா -
Share This:   FacebookTwitterGoogle+

"அவள் அப்படித்தான்" (ருத்ரைய்யா எனும் தமிழ் சினிமா இயக்குனர்)

தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான பல்வேறு விமர்சனங்களைத் தன்னகத்தே கொண்டு தமிழ்ரசிகர்களை ஆட்டம் காண வைத்து  இன்று கூட விடை காண முடியாத ஒரு யதார்த்தமான,புதுமையான படைப்பே சி.ருத்ரய்யாவின் "அவள் அப்படித்தான்"திரைப்படம்.ஒற்றைத்திரைப்படத்துக்காக,தமிழ் சினிமாவின் வரலாற்றுப்பக்கங்களில் விமர்சகர்களாலும் நல்ல படைப்பை எதிர்பார்ப்பவர்களாலும் இன்று வரை நினைவுகூர வைத்த பெருமை சி.ருத்ரய்யா அவர்களையே சாரும்.


1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் கறுப்பு வெள்ளையில் வெளியான இத்திரைப்படம் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும் படைப்பு என்றே கூறலாம்.இத்திரைப்படம் எழுந்த காலகட்டத்தையும் பின்னணியையும் வைத்து நோக்கும் போது இத்திரைப்படத்திலுள்ள குறைகளையும் போதாமைகளையும் தாண்டி இது ஒரு மிகச்சிறந்த படைப்பு என்பதில் துளியளவும் எவரும் சந்தேகிக்க இயலாது.


இத்திரைப்படத்தில் அந்தக்காலத்திலேயே மிகவும் புகழப்பட்டு பிரசித்தி பெற்ற மூன்று நட்ச்சத்திரங்களான ரஜனிகாந்த்,கமலஹாசன்,ஸ்ரீப்ரியாவைக்கொண்டு உருவாக்கப்பட்டது.அந்த வகையில் மஞ்சு (ஸ்ரீப்ரியா) எனப்படும் கதாப்பாத்திரம்தான் பிரத்தியேகமான தனித்தன்மையுடன் தமிழ் சினிமாவில் யதார்த்தமாக  உருவாக்கப்பட்ட முதல் பெண் கதாநாயகி என்று கூறலாம்.அதுவரைகாலமும் கவர்ச்சி பொம்மையாக நடிக்கப்பயன்படுத்தப்பட்ட  ஸ்ரீப்ரியா எனும் நடிகையின் இயல்பான,திறமையான நடிப்பை இப்படத்திற்கு முன்னும் பின்னும் எவரும் முழுமையாக பயன்படுத்தவில்லை.இதிலிருந்தே சி.ருத்ரய்யா அவர்களின் கதாபாத்திரங்களைக் கையாளும் திறனைக்கண்டு கொள்ள முடியும்.


அவள் அப்படித்தான் திரைக்கதையை நோக்கினால்,மஞ்சு எனப்படுகின்ற ஒரு பெண், தாயின் தவறான ஆண்களுடனான பாலியல் தொடர்புகளைக்கண்டும்,ஆண்களின் தொடர்ச்சியான ஆணாதிக்கம் மற்றும் கயமைத்தனங்களால் உளவியல் மற்றும் உடலியல் ரீதியாக பாதிக்கப்பட்டும், சமூகத்தில் உள்ள ஆண்களின் மீதும், குடும்ப உறவுகளின் மீதும் நம்பிக்கையற்ற தன்மை,வெறுப்புணர்ச்சி மேலோங்கி  காணப்படுகின்ற ஒரு புரிந்து கொள்ள முடியாத  இயல்பானவளின் வாழ்க்கை கதை என்றே கூறலாம்.சுருக்கமாக கூறின் படத்தின் மையக்கரு மஞ்சுவின் உளவியல் வெளிப்பாடே.நம்பிக்கைதான் உண்மை நிலையை உருவாக்குகின்றது என்பதற்கிணங்க ஒரு உறவின் மீது நம்பிக்கை ஏற்படும் போது அவள் பிறக்கிறாள்;மேலும் அதே நம்பிக்கை ஏமாற்றப்பட்டு உடைந்து போகும் போது அவள் இறக்கிறாள் இதனையே ஒரு கவியாக படத்தின் இறுதியில் கூறப்படுகிறது "அவள் பிறப்பாள் இறப்பாள்,இறப்பாள் பிறப்பாள் அவள் அப்படித்தான்"எனும் இறுதி வரியுடன் படம் முற்றுப்பெறுகிறது.




இப்படத்தின் சிறப்பம்சங்களை சொல்லப்போனால்,கமல்ஹாசன், ரஜனி இருவரும் அக்காலகடடத்தில் பிரபல்யமான கதாபாத்திரமாக இருந்த போதும் படத்தின் கதையின் தன்மை உணர்ந்து  எந்த ஒரு நிலையிலும் தங்களது சுய ஆதிக்கம் வெளிப்படாமல் யதார்த்தமாக
​நடித்துள்ளனர்.

ரஜனி-யதார்த்தமான ஆண்களின் நிலையை விளக்குவதாகவும் பழமையில் இருந்து மாறாத ஒரு ஆணாகவும் பெண்களை ரசிக்கும் ஆராதிக்கும் ஆணாக இருந்தாலும்கூட  வன்முறையில் பெண்ணை அடைய விரும்பாத ஒரு சாதாரண ஆண்.

கமல்-பெண்களுக்கு சார்பாக,பெண் விடுதலைக்காக முயற்சிக்கும் ஆவணப்படங்களை உருவாக்கும் ஒரு புதுமையான நபர்.மஞ்சுவின் வித்தியாசங்களால் கவரப்படடவர். இவ்வாறாக திரைப்படக்கதாபாத்திரங்கள் யதார்த்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் இத்திரைப்படம் பதிலடி கொடுக்கும் வகையில் வித்தியாசமான வசனங்கள்,நுனி நாக்கில் ஆங்கிலம்,அதுவும் பச்சையாக,தமிழில் கூட பச்சையாக வார்த்தைப்பிரயோகம்,இசைஞ்ஞானி இளையராஜாவின் இசை இவ்வாறானவற்றை உள்ளடக்கி இத்திரைப்படம் அமைந்துள்ளது

இத்திரைப்படம் முழுக்க முழுக்க பெண்ணியம்,பெண்சுதந்திரம்,ஆணாதிக்கம்,சமூக கண்ணோட்டம்,பெண் பற்றிய சமூக விமர்சனங்களைப்பற்றியும் திடீர் திடீர் என யதார்த்தமாக பேசி விடுகிறது.அவற்றில் சிலவற்றை அடையாளப்படுத்தலாம்.பெண்கள் வேலைக்குச்செல்லல்,முஸ்லீம் பெண்களின் ஆடை நிலை,குடும்பக்கட்டுப்பாடு,திருமணத்திற்கு முன் உடலுறவு,கருக்கலைப்பு ,பெண்கள் கல்வி நிலை,ஆண்கள் பல திருமணம் முடித்தல்,பெண்களின் ஆடை நிலை,நடிகைகள் பற்றிய சமூகத்தின் நிலை.

"அவள் அப்படித்தான" திரைப்படத்துக்கு முதலில் அங்கீகாரமே கிடைக்கவில்லையாம்.தமிழ் திரையுலமும் ரசிகர்களும் எப்போதுமே திறமை சாலிகளை எப்போதுமே அடையாளம் கண்டு கொள்ள மாடடார்கள் என்பதற்கு இப்படத்தின் இயக்குனர் ருத்ரைய்யா ஒரு எடுத்துக்காட்டு.ருத்ரைய்யாவின் கதையை கேட்டு அவரது திறமையை புரிந்து கொண்ட கமலஹாசன்,அவரே முழுவதும் பொறுப்பெடுத்து முன்னின்று ரஜனிகாந்த்,ஸ்ரீப்ரியா,இளையராஜா ஆகியோரைத்தெரிவு செய்து படத்தில் பணி புரிய வைத்துள்ளார்.எப்போதெல்லாம் ஓய்வாக இருப்பார்களோ அந்த சந்தர்ப்பங்களில் படப்பிடிப்புகள் நடை பெற்றது.கமலஹாசன் வீடு,ஸ்ரீப்ரியா வீடு,தயாரிப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் மட்டுமே படப்பிடிப்புகள் நடை பெற்றன.இப்படக்கூட்டணி நடித்த "இளமை ஊஞ்சலாடுது" திரைப்படம் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்றதனால் இப்படமும் நல்ல விலைக்கு விற்கப்பட்டது.படம் முடிந்து தியேட்டரில் திரையிட்ட போது ரசிகர்கள் பயங்கரமாக கத்தி கூச்சல் போட்டு ரகளை செய்திருக்கிறார்கள்.படத்தை தியேட்டரை விட்டே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம்.படத்திற்கு மார்க் போடும் கூட்டம் கூட குறைவான மார்க்குகளைப்போட்டு படத்தை புறக்கணித்ததாம்.இது இவ்வாறிருக்க இந்திய திரை உலகின் மேதைகளுள் ஒருவரான "மிருணாள்சென்"ஒரு வேலையாக சென்னை வந்தபோது யதேர்ச்சையாக அவள் அப்படித்தான் படம் பார்த்திருக்கிறார்.இப்படிப்பட்ட ஒரு அருமையான படத்தை தமிழ் ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கத்துடன் அவரே பத்திரிகையாளர்களை அழைத்து படத்தின் பெருமைகளையும் சிறப்புக்களையும் கூறியிருக்கிறார்.அதன் பின்னர்தான் பத்திரிகைகளும் அவற்றைப்பாராட்டி வெளியிட்ட பின்னர் படம் நல்ல வரவேற்பைப்பெற்றதுடன்  ஓட ஆரம்பித்தது.இந்தியாவின் பல இடங்களில் நூறு நாட்களுக்கு மேல் இந்த படம் ஓடியுள்ளது.ஒரு சிறந்த தமிழ் இயக்குனர் திறமை பற்றி எங்கிருந்தோ வந்த ஒருவர் கூறித்தான் அவரைப்பற்றி தெரிந்து கொள்ளப்பட்டுள்ளது.அதே நிலைதான் தற்காலத்திலும் தொடர்கின்றது என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். 




ருத்ரைய்யா அவர்களின் இரண்டாவது படமான "கிராமத்து அத்தியாயம்"சரியாக பேசப்படவில்லை என்றாலும் அவரின் ஒரே ஒரு படைப்பே போதும் தமிழ் திரையுலகம் அவரது படைப்பை  காலங்காலமாக போற்றி துதி பாடிட. 

- அத்தியா -
Share This:   FacebookTwitterGoogle+

Blog Archive

Followers

About Me

My photo
"வாழ்வெனும் கங்குலை புரிந்து கொள்ளத்துடிக்கும் மின்மினி இவள்"
Copyright © மின்மினி |